இந்தோனேஷியாவில் நடந்த பிரசிடென்ட் கோப்பை குத்துச்சண்டை தொடரில், இந்திய வீராங்கனை மேரி கோம் (51 கி.கி.,) தங்கப் பதக்கம் வென்றார்
இந்தோனேஷியாவில், 23வது பிரசிடென்ட் கோப்பை குத்துச்சண்டை தொடர் நடந்தது. இதன் பெண்களுக்கான 51 கி.கி., எடைப்பிரிவு பைனலில், இந்தியாவின் மேரி கோம், ஆஸ்திரேலியாவின் பிராங்க்ஸ் ஏப்ரல் மோதினர். இதில் துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய மேரி கோம், 5& ;0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.
ஆறு முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற மேரி கோம் 36, கடந்த மே மாதம் நடந்த இந்திய ஓபனில் தங்கம் வென்றிருந்தார். தாய்லாந்தில் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் தொடரை புறக்கணித்த இவர், வரும் செப். 7& 21ல் ரஷ்யாவில் நடக்கவுள்ள உலக சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கவுள்ளார். இதில் சிறப்பாக செயல்படும் பட்சத்தில், அடுத்த ஆண்டு நடக்கவுள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறலாம்.
மற்ற எடைப்பிரிவு பைனலில் அசத்திய இந்தியாவின் நீரஜ் சுவாமி (49 கி.கி.,), ஆனந்தா பிரல்ஹத் (52 கி.கி.,), அங்குஷ் தஹியா (64 கி.கி.,), ஜமுனா போரோ (பெண்கள் 54 கி.கி.,), சிம்ரன்ஜித் கவுர் (பெண்கள் 60 கி.கி.,), மோனிகா (பெண்கள் 48 கி.கி.,) ஆகியோர் தலா ஒரு தங்கம் வென்றனர். பைனலில் தோல்வி கண்ட இந்தியாவின் கவுரவ் பிதுரி (56 கி.கி.,), தினேஷ் தாகர் (69 கி.கி.,) தலா ஒரு வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினர்.
இத்தொடரில் இந்தியாவுக்கு 7 தங்கம், 2 வெள்ளி உட்பட 9 பதக்கங்கள் கிடைத்தன

