பிரதமர் நரேந்திரமோடியை டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. நேற்று சந்தித்து பேசினார். அப்போது, பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் நேற்று காலை பிரதமர் நரேந்திரமோடியை டெல்லியில் சந்தித்து பேசினார். 15 நிமிடங்களுக்கு மேல் நடந்த இந்த சந்திப்பின்போது தமிழக நலன் சார்ந்த பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர்.
முதலில், மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக அன்புமணி ராமதாசுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்ட பிரதமர், அவரது பணி சிறக்க விருப்பம் தெரிவித்தார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு முத்து விழா கொண்டாடப்பட்டது பற்றி மகிழ்ச்சி தெரிவித்த பிரதமர், ஒருவர் அவரது வாழ்க்கையில் ஆயிரம் பிறைகளை காண்பது பெரும் பேறு என்று குறிப்பிட்டார். மேலும் டெல்லிக்கு வரும்படி டாக்டர் ராமதாசுக்கு அழைப்பு விடுத்தார்.
தமிழகத்தின் பாசன வளத்தை மேம்படுத்த கோதாவரி – காவிரி இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் வேண்டு கோள் விடுத்தார். அதை ஏற்ற பிரதமர், “அடுத்து வரும் 5 ஆண்டுகளில் பாசனத்திட்டங் கள் மற்றும் நதிகள் இணைப்பில் அதிக கவனம் செலுத்துவேன். கோதாவரி – காவிரி இணைப்பு திட்டத்திற்கு எவ்வளவு கோடி செலவானாலும் அதை நான் செயல்படுத்தியே தீருவேன்” என்று உறுதியளித்தார்.
பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய உதவும்படியும் பிரதமரிடம் அவர் வேண்டுகோள் விடுத்தார். “7 தமிழர்களும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பது தான் தமிழக மக்களின் மனநிலை ஆகும்.
இதுதொடர்பாக தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன்மீது இன்னும் முடிவெடுக்கப்படவில்லை” என்று கூறினார். இதுகுறித்தும் சம்பந்தப்பட்டவர்களுடன் பேசுவதாக பிரதமர் உறுதியளித்தார்.
மேற்கண்ட தகவல் பா.ம.க. தலைமை நிலையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
பாராளுமன்ற மாநிலங்களவை நேற்று காலை 11 மணிக்கு கூடியதும் அன்புமணி ராமதாஸ் உறுப்பினராக பதவி ஏற்றுக்கொண்டார். அப்போது அவர் தமிழில் உறுதிமொழி எடுத்துக்கொண்டார். அவையின் தலைவர் வெங்கையாநாயுடு அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது மற்ற எம்.பி.க்கள் மேஜையை தட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.