குண்டுத்தாக்குதலில் சேதமடைந்த மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தை பார்வையிட்டார் சி.வி.விக்னேஸ்வரன்!

399 0

உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதலுக்கு இலக்காகி சேதமடைந்த மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தை தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

பலரது உயிரை பலிவாங்கிய ஏப்ரல்-21 இல் மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதலில் சேதமடைந்துள்ள மட்டக்களப்பு தேவாலயம் புனரமைப்பு செய்யப்பட்டு வருகின்றது. தமிழ் மக்கள் கூட்டணியின் அரசியல் செயற்பாட்டை வலுப்படுத்தும் முகமாக கட்சியின் மத்திய குழு உறுப்பினர் அணியுடன் கிழக்கில் தங்கியிருந்து மக்கள் சந்திப்புகளை மேற்கொண்டுவரும் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் நேற்று சனிக்கிழமை மாலை சியோன் தேவாலயத்திற்கு சென்று பார்வையிட்டுள்ளதுடன் சியோன் தேவாலயத்தின் பாதிரியார் மற்றும் தொண்டர்களிடம் புனரமைப்பு பணிகள் குறித்தும் கேட்டறிந்தார்.

இதன்போது தமிழ் மக்கள் கூட்டணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் சோமசுந்தரம், நிர்வாக உப செயலாளரும் கிளிநொச்சி மாவட்ட குழு உறுப்பினருமான ஆலாலசுந்தரம், கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் அன்ரனி கெப்ரியல், ஊடகம் மற்றும் செயற்திட்ட ஆக்கத்திற்கான உப செயலாளர் த.சிற்பரன், இளைஞர் அணி இணைப்பாளர் கிருஸ்ணமீனன், மத்தியகுழு உறுப்பினர் இரா.மயூதரன், கணக்காளர் ராஜாதுரைசிங்கம் மற்றும் ஊடக உதவியாளர் சதீஸ் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

கல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி கடந்த ஏப்ரல்-21 ஆம் திகதி தமிழ் உணர்வாளர்களால் மேற்கொள்ளப்பட்ட நடை பயணத்தில் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் கலந்து கொண்டிருந்த வேளையில்தான் இக்குண்டுத் தாக்குதல் இடம்பெற்றிருந்தது. அதனையடுத்து நடைபயணம் நிறுத்தப்பட்டிருந்தது. உடனடியாக மட்டக்களப்பு மருத்துவமனைக்கு நேரில் சென்று காயப்பட்டவர்களை பார்வையிட்டு ஆறுதல் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.