5G கம்பங்களை மின்கம்பங்களாகக் காட்டி மக்களை முட்டாளாக்கியுள்ளது யாழ். மாநகரசபை!-ஐங்கரநேசன்

291 0

அதி வேகத் தொலைத் தொடர்புக் கம்பங்களை சாதாரண மின் விளக்குக் கம்பங்களாகக் காட்டி யாழ்ப்பாணம் மாநகரசபை மக்களை முட்டாள் ஆக்கியுள்ளது என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரும் வடக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சருமான பொ. ஐங்கரநேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே பொ.ஐங்கரநேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இச்சந்திப்பில் அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், “யாழ் மாநகரசபையின் எல்லைப் பரப்பினுள் புதிதாக அமைக்கப்பட்டுவரும் தொலைத் தொடர்புக் கம்பங்களை 5G அலைக்கற்றைக் கம்பங்களாகக் கருதிப் பொதுமக்கள் பயங்கொள்வதையும், எதிர்ப்பு ஆர்பாட்டங்களில் ஈடுபடுவதையும் எவரும் பிழை என்று கூறமுடியாது.

தவறு யாழ் மாநகரசபையிலும், இதனை அமைப்பது தொடர்பாக எடொக்ரோ (edocto) என்ற நிறுவனத்துடன் அது செய்துகொண்ட ஒப்பந்தத்திலுமே உள்ளது.

எடொக்ரோ தொலைத்தொடர்பு உட்கட்டுமானங்களை நிர்மாணித்துக் கொடுக்கின்ற மலேசியாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்குகின்ற ஒரு தனியார் நிறுவனம். இரண்டு தரப்புகளும் செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தில் ஸ்மார்ட் விளக்குக் கம்பங்களை (Smart Lamp Pole) அமைப்பதற்கான ஒப்பந்தம் என்றே தலைப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தில் முதலில் விளக்குகள் பொருத்துவது பற்றியும், அடுத்து விளம்பரச்சாதனங்கள் பொருத்துவது பற்றியும் பின்னர் கண்காணிப்புக் கமெராக்கள் பொருத்துவது பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடைசியில், ஏதோ முக்கியத்துவம் இல்லாத ஒன்றைக் குறிப்பிடுவதுபோல சிறிய செலூலர் அன்ரெனாக்கள் பொருத்தப்படுவது பற்றியும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. உண்மையில், இதுவே பிரதானமானது.

விளக்குகள், விளம்பரங்கள், கமெராக்கள் எல்லாம் இதனுடன் கொடுக்கப்படுகின்ற உதிரி இணைப்புகள். மக்களின் கவனத்தைத் திசைதிருப்பி அவர்களை ஏமாற்றும் நோக்கில் இவற்றை முன்னிலைப்படுத்தியிருப்பது பாரதூரமான தவறு ஆகும்.

ஒப்பந்தத்தில் சிறிய அலை ஈர்ப்பி (Antenna)) என்று குறிப்பிடப்பட்டுள்ளேதே தவிர அது 4G அல்லது 5G தொடர்பாடலுக்கானதா என்பது பற்றி எதுவுமே குறிப்பிடப்படவில்லை. ஆனால், 5G அலைக்கற்றைக்கான அன்ரெனாக்கள் மிகவும் சிறியவை என்று புரிந்து கொள்ளமுடியாத அளவுக்கு யாழ்ப்பாணச் சமூகம் அறிவிலிகள் அல்லர்.

டயலொக், மொபிடல் நிறவனங்கள் 5G அலைக்கற்றைகளை அண்மையில் பரீட்சார்த்தமாகப் பரிவர்த்தனை செய்துவிட்டு தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணையத்திடம் இருந்து வணிகரீதியிலான அனுமதிக்காகக் காத்திருக்கின்றன.

மொபிடல் 5G வலையமைப்புக்கென 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை இந்த ஆண்டில் செலவிடவிருப்பதாக அறிவித்திருக்கிறது. இந்நிலையில் இந்தக்கம்பங்கள் 5G க்கு உரியவை என்று பொதுமக்கள் கருதுவது நியாயமானதே.

தொலைத்தொடர்புத் தொழில்நுட்பத்தில் 5G எனப்படுவது 5 ஆவது தலைமுறை (5 th Generation) என்பதைக் குறிக்கிறது. இது தற்போதுள்ள  நான்காவது தலைமுறையான  4G ஐ விட  அதி வேகத்தில், மிக குறுகிய நேரத்தில், அதிக கொள்ளளவுடைய  தகவல்களைப் பரிமாற்றக்கூடியது.

ஆனால், இதன் அலைக்கற்றைகள் குறுகிய அலைநீளம்  கொண்டவை. இதனால், 5G வலையமைப்பில்  மிக அதிக எண்ணிக்கையான அலைஈர்ப்பிகளை (Antenna) குறுகிய இடைவெளிகளில்   நிர்மாணிக்கவேண்டும். இதனாலேயே  மின்விளக்குக் கம்பங்களின் இடத்தினை அன்ரெனாக் கம்பங்கள் பிடிக்க ஆரம்பித்துள்ளன.

5G வலையமைப்பில்  அன்ரெனாக்கள் அதிகம் என்பதால் நாம் என்றும் எப்போதும் மின்காந்தக் கதிர்வீச்சின்  தாக்குதலுக்கு  ஆளாக வேண்டிய  நிர்ப்பந்தம் ஏற்படும். இது மனிதர்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஆபத்தானது.

இதனால், இதனை முழுமையாக அனுமதிப்பதில் மேற்குலக நாடுகள்   தயக்கம் காட்டிவருகின்றன. இதன் பாதிப்புகளை முழுமையாக ஆய்வு செய்கின்றவரைக்கும்  தொலைத்தொடர்பாடலில் 5G ஐப் பயன்படுத்துவதை நிறுத்தி வைக்குமாறு 36 நாடுகளைச் சேர்ந்த 180 விஞ்ஞானிகளும், மருத்துவர்களும் ஐரோப்பிய ஒன்றியத்திடம் கூட்டாகக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அமெரிக்கா 5G வலையமைப்பின் ஊடாகச் சீனா உளவு பார்க்கலாம் என்ற அச்சம் காரணமாகச் சீனத் தயாரிப்பு 5G செல்லிடப்பேசிகளைப் பயன்படுத்துவதற்கு அங்கு தடைவிதித்திருக்கிறது.

தொழில்நுட்ப நாடான சிங்கப்பூர் இன்றுவரை 5G ஐ ஆரம்பிக்கவில்லை. இந்நிலையில், அடிப்படைச் சேவைகளையே மக்களுக்குப் பூரணமாக  வழங்கமுடியாத நிலையில் உள்ள யாழ் மாநகரசபையும், சில பிரதேசசபைகளும் 5G க்கு அவசரம் அவசரமாகப் பச்சைக் கம்பளங்களை விரிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத, காலத்தால் முந்திய ஒரு செயல்.

அத்தோடு, யாழ் மாநகரசபை இது தொடர்பாக எடொக்ரோவுடன் செய்து கொண்ட ஒப்பந்தமும் முறையற்றது.  மாநகரசபைகளுக்குரிய  விதிகளின்படி ஒரு வருடத்துக்கு மேலான காலத்துக்கு ஒரு திட்டத்துக்கு அனுமதி  வழங்கும்போது ஆணையாளரும், மாநகர முதல்வரும் கண்டிப்பாக  ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவேண்டும்.

ஆனால், பத்து  வருடங்களுக்கு அனுமதி வழங்கியுள்ள  இந்த ஒப்பந்தத்தில் மாநகர முதல்வர் மட்டுமே கையெழுத்திட்டுள்ளார். மாநகர ஆணையாளர்   என்ன காரணத்துக்காகவோ கையெழுத்து இடுவதைத் தவிர்த்துக்கொண்டார்.

இவற்றின் அடிப்படையில், திறன்; விளக்குக் கம்பங்கள் என்ற போர்வையில் அதி வேகத் தொடர்பாடற் கம்பங்களை அமைக்கும் பணிகளை உடனடியாக நிறுத்துவதற்கு யாழ் மாநகரசபையும், பிரதேசசபைகளும் ஆவன செய்யவேண்டும்” என தெரிவித்துள்ளார்.