ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை புறப்பட்டது குடிநீர் ரெயில்

387 0

ஜோலார்பேட்டையில் இருந்து 25 லட்சம் லிட்டர் தண்ணீருடன் இன்று சென்னைக்கு புறப்பட்ட குடிநீர் ரெயிலை வரவேற்க வில்லிவாக்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சென்னை குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள காவிரி கூட்டு குடிநீர் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியில் இருந்து சென்னைக்கு ரெயிலில் குடிநீர் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. இதற்காக அரசு ரூ.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை முடுக்கி விட்டது.

அதன்படி குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், ரெயில்வே அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு துறையை சேர்ந்த ஊழியர்கள் கடந்த 10 நாட்களாக தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் தற்போது பணிகள் நிறைவடைந்த நிலையில் இன்று ரெயில் மூலம் தண்ணீர் அனுப்பப்பட்டது.
வேகன்கள்

50 வேகன்களில் தலா 25 லட்சம் லிட்டர் தண்ணீர் என மொத்தம் 25 லட்சம் லிட்டர் தண்ணீர் ஏற்றப்பட்ட முதல் ரெயில் இன்று காலை ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு புறப்பட்டது.  தமிழ்நாடு குடிநீர் வாரிய நிர்வாக இயக்குநர் மகேஷ் கொடியசைத்து குடிநீர் ரெயிலை தொடங்கி வைத்தார்.

இந்த ரெயில் சென்னையில் உள்ள வில்லிவாக்கத்துக்கு மதியம் சுமார் 1 மணியளவில் சென்று சேரும். அப்போது ரெயிலை வரவேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் டி.என்.ஹரிஹரன் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்கின்றனர். எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட சில அமைச்சர்களும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தண்ணீர் வில்லிவாக்கம் ரெயில் நிலையம் அருகில் அமைக்கப்பட்டுள்ள குழாய்கள் மூலம் கீழ்ப்பாக்கம் குடிநீர் ஏற்றும் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டு சுத்திகரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட உள்ளது.

சென்னைக்கு குடிநீர் அனுப்புவதற்காக ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து 70 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 100 வேகன்கள் ஜோலார்பேட்டைக்கு வரவழைக்கப்பட்டுள்ளன. ஒரு நாளைக்கு 4 முறை மொத்தம் 1 கோடி லிட்டர் தண்ணீர் கொண்டு வர முடிவு செய்யப்பட்டிருக்கிறது.