பூநகரியில் கடும் குடிநீர் நெருக்கடி-15 பாடசாலைகளில் மாணவர்கள் அவதி

429 0

171கிளிநொச்சி – பூநகரிக் கல்விக் கோட்டத்தில் 15 பாடசாலைகள் கடுமையான குடிநீர் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக பூநகரிக் கோட்டக் கல்வி அதிகாரி சு.தர்மரட்ணம் தெரிவித்துள்ளார். பூநகரியில் நிலவும் குடிநீர்ப்பற்றாக்குறையால் மாணவர்கள் எதிர்நோக்கும் நெருக்கடி நிலைமை தொடர்பாக தெரிவித்தார்.

பூநகரி மகாவித்தியாலயம், ஸ்ரீவிக்னேஸ்வரா வித்தியாலயம் உட்பட 15 பாடசாலைகளில் குடிநீர் நெருக்கடி காணப்படுவதாக குறிப்பிட்ட அவர்,இப்பாடசாலைகளுக்கு பூநகரி பிரதேச சபை குடிநீர் வழங்கலை மேற்கொண்டுள்ள போதிலும் அது போதுமானதாக இல்லை எனக் குறிப்பிட்டார். பாடசாலைகளில் நிலவும் குடிநீர் நெருக்கடி தொடர்பாக வலயக் கல்விப் பணிப்பாளருக்கும் ஏனைய அதிகாரிகளுக்கும் தகவல் வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை குடிநீர்ப்பற்றாக்குறையால் பூநகரி வைத்தியசாலையிலும் பாரிய நெருக்கடி நிலவுகின்றது.எனினும் நன்னீர் கிணறுகள் ஒருங்கே அமைந்துள்ள பூநகரி பழைய வைத்தியசாலை வளாகம் தொடர்ந்தும் இராணுவத்தின் கட்டுப்பாட்டின் சீழ் உள்ளமை குறிப்பிடத்தக்கது. குடிநீர் நெருக்கடியைத் தீர்ப்பதற்கு குடிநீர்த் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துமாறு பிரதேச செயலக மற்றும் மாவட்ட செயலகத்தில்  இடம்பெறும் கூட்டங்களில் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வரும்போதும் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

Leave a comment