எனக்கு மட்டும் காங்கிரசில் நெருக்கடி கொடுக்கிறார்கள்- கராத்தே தியாகராஜன்

376 0

தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிட வேண்டும் என பல தலைவர்கள் பேசியபோதிலும், தனக்கு மட்டும் கட்சியில் நெருக்கடி தருவதாக கராத்தே தியாகராஜன் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட கராத்தே தியாகராஜன் இன்று சென்னையில் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தை சந்தித்து பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

நான் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியின் அன்பை பெற்றவன் அவருக்கு எப்போதும் விசுவாசமாக இருப்பேன். எந்த கட்சிக்கும் போக மாட்டேன். நான் மிகவும் மதிக்கும் தலைவரான ப.சிதம்பரத்துக்கு விசுவாசமாக இருப்பேன். கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டது தொடர்பாக அவர் சில விவரங்களை கேட்டார். நானும் சில விளக்கங்களை அளித்திருக்கிறேன்.
ராகுல் காந்தி

வரும் தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிட வேண்டும் என கூட்டத்தில் பல தலைவர்கள் பேசினார்கள். ஆனால், எனக்கு மட்டும் கட்சியில் நெருக்கடி தருகின்றனர். இது கட்சியின் தலைவர் ராகுல் காந்திக்கு தெரிந்து எடுக்கப்பட்ட நடவடிக்கையா? அல்லது நேரடியாக வேணுகோபால் எடுத்தாரா? என தெரியவில்லை.

ராகுல்காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக நான் பேசவில்லை. நான் பேசியது தவறு என்றால், கூட்டத்திலேயே அழகிரி என்னை ஏன் கண்டிக்கவில்லை? ஏன் விளக்கம் கேட்கவில்லை? விஜயதாரணி எம்எல்ஏ மோடியை ஆதரித்து பேசினார். அவர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? அழகிரிக்கு தெரியாமல் என் மீது நடவடிக்கை எடுத்திருக்க வாய்ப்பு இல்லை. ஆனால் அவர் திமுக மீது பழி போடுகிறார்.

காங்கிரஸ் கட்சியின் சொத்தை கொள்ளையடித்தவர் கோபண்ணா. புத்தகம் போட்டு கோடிக்கணக்கில் சம்பாதித்தவர். மூடப்பட்ட பத்திரிகையின் பெயரில் பாஸ் அச்சடித்து விற்பனை செய்தவர். அவர் டெல்லியில் இருந்துகொண்டு என் மீது நடவடிக்கை எடுக்க வைத்துள்ளார். அவர் மீது திங்கட்கிழமை சென்னை கமிஷனர் அலுலவகத்தில் புகார் கொடுக்க போகிறேன்.

இவ்வாறு கராத்தே தியாகராஜன் கூறினார்.