ஆத்ம பரிசோதனை செய்து அ.தி.மு.க. மீண்டும் எழ வேண்டும்துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி கருத்து

543 0

நாடாளுமன்ற தேர்தலில் வரலாறு காணாத தோல்வியை சந்தித்த அ.தி.மு.க. தன்னை ஆத்ம பரிசோதனை செய்து மீண்டும் எழ வேண்டும் என்று துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி கூறியுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் வரலாறு காணாத தோல்வியை சந்தித்த அ.தி.மு.க. தன்னை ஆத்ம பரிசோதனை செய்து மீண்டும் எழ வேண்டும் என்று துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி கூறியுள்ளார்.
துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி எழுதியுள்ள தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:-
வரலாறு காணாத தோல்வி
நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அதன் சரித்திரத்தில் காணாத பெரும் தோல்வியை சந்தித்து இருக்கிறது. எப்படி வெற்றி என்பது ஒரு கட்சிக்கு மக்கள் அளிக்கும் பொறுப்போ, அதுபோல் தோல்வி என்பதும் ஒரு கட்சி திருந்த மக்கள் அதற்கு அளிக்கும் ஒரு வாய்ப்பு தான். அந்த வாய்ப்பை அ.தி.மு.க.வினர் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது தான் நம் விருப்பம்.
அ.தி.மு.க. தோல்வி அடைய 4 முக்கிய காரணங்கள் இருக்கிறது. வெளிப்படையான ஊழல் ஆட்சி, நவகிரகங்கள் போன்று ஒருவரை ஒருவர் பார்க்காத திசையற்ற தலைமை, பிரிந்த தலைவர்களால் தேர்தல் பணியில் குழம்பிய தொண்டர்கள், பணத்தின் மூலம் வெற்றி பெற்று விடலாம் என்ற கட்சிக்குள் ஏற்பட்டுள்ள புற்றுநோய் போன்று புரையோடியுள்ள தவறான நம்பிக்கை இது தான் காரணம்.
தோல்வியுற்ற கட்சி தலைமை அதற்கான காரணத்தை ஆராய்ந்து, தவறுகளை திருத்தி குறைகளை நீக்கி, தொண்டர்களை ஊக்குவித்து, அடுத்து வரும் தேர்தலில் வெற்றி பெற திட்டமிடுவது தான் அரசியலில் தவிர்க்க கூடாத நடவடிக்கை. ஆனால், எந்த ஆய்வோ, விவாதமோ இல்லாமல், தற்போது நடந்த தேர்தலில் தோல்வி அடையாத கட்சி போல, அ.தி.மு.க. நடந்து கொள்வது பெரும் ஆச்சரியமாக உள்ளது. இது அ.தி.மு.க.வுக்கோ, தமிழக அரசியலுக்கோ நல்லதல்ல.
பணத்தால் வெற்றி பெற முடியாது
பணத்தால் மட்டுமே வெற்றி பெற முடியாது என்பதை தி.மு.க.வுக்கு 2011-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தல் உணர்த்தியது. பணத்தால் மட்டுமே வெற்றி பெற்று விட முடியாது என்பதை அ.தி.மு.க.வுக்கு 2019-ம் ஆண்டு நடந்த தேர்தல் உணர்த்தியிருக்க வேண்டும். இருந்தும், ஆட்சியில் இருப்பதால் ஊழல்கள் செய்து ஏராளமான நிதி சேர்த்து விட்டால், 2021-ல் வெற்றி பெற்று விடலாம் என்று இப்போதும் அ.தி.மு.க. தலைமை நினைத்தால் அது துரதிர்ஷ்டமே.
அ.தி.மு.க. தலைமைக்கு ஒன்று புரிய வேண்டும். கட்சி வலுவாக இருந்தால் தான் ஆட்சிக்கு வர முடியும். கட்சியால் ஆட்சி நிலைக்குமே தவிர, ஆட்சியால் கட்சி நிலைக்காது. எனவே வரும் 2 ஆண்டுகளில் தான் செய்த தவறுகளை அ.தி.மு.க. உணர்ந்து, வெளிப்படையாக ஒப்புக்கொண்டு, தலைவர்கள் ஒன்றுபட்டு கட்சியை வலுப்படுத்தி, நல்லாட்சி செய்து, இழந்த நற்பெயரை மீட்டெடுத்தால் மட்டுமே வருகிற சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு கிட்டும். அதை செய்யவில்லை என்றால், என்ன நடக்கும் என்பதை நான் கூற வேண்டிய அவசியம் இல்லை.
அ.தி.மு.க. தலைவர்கள் ஒன்றுபட வேண்டும்
கருணாநிதி குடும்பத்தின் பிடியில் சிக்கியிருக்கும் தி.மு.க.விடம் மறுபடி ஆட்சி சிக்குவது தமிழகத்திற்கும், அதன் பாரம்பரியத்திற்கும், பண்புக்கும், ஆன்மிகத்திற்கும் தேசியத்திற்கும் நல்லதல்ல என்பது நம் கருத்து. புத்துணர்வு பெற்ற அ.தி.மு.க. 2021-ல் தி.மு.க.வை எதிர்கொள்ள வேண்டும். அதற்கு அ.தி.மு.க. தலைவர்கள் ஒன்றுபட வேண்டும். வெளிப்படையான ஊழல்கள் நிற்க வேண்டும். வெட்கமற்ற சுயநலத்தை தவிர்க்க வேண்டும். (அரசியல்வாதிகள் புத்திசாலித்தனமான சுயநலத்துடன் இருக்க வேண்டும் என்று சி.சுப்பிரமணியம் கூறுவார்). மேல் மட்டத்தில் நிலவும் வெளிப்படையான சுயநலம், கீழே ஊடுருவி அ.தி.மு.க. தொண்டர்களையும் சீரழித்து வருகிறது. எனவே ஆத்ம பரிசோதனை செய்து, தவறுகளை திருத்தி, அ.தி.மு.க. மறுபடியும் எழ வேண்டும் என்கிற எண்ணத்தில், தன் கருத்துகளை அ.தி.மு.க.வினர் முன் வைக்கிறது துக்ளக்.
முடிவாக, ஒரு கட்சி எந்த காரணத்திற்காக தோன்றியதோ அந்த நோக்கம் நிறைவேறினாலும் அது மறைந்து விடும், அதை கைவிட்டாலும் மறைந்து விடும். எந்த கட்சியும் 500, 1,000 ஆண்டுகள் நிலைக்காது. எல்லா கட்சிகளுக்கும் காலவரை உண்டு. நாடு இருக்கும், தர்மம் இருக்கும். ஆனால் கட்சிகள் வரும், போகும். அந்த வகையில் பார்த்தால் தி.மு.க. எதிர்ப்பில் பிறந்த சக்தி அ.தி.மு.க., தி.மு.க. எதிர்ப்பு தான் அதன் ஆன்மா. எம்.ஜி.ஆர். பாரம்பரியத்தில் வந்த அ.தி.மு.க. தொண்டர்கள் தி.மு.க.வை ஏற்க மாட்டார்கள்.
அறிவுரை
எம்.ஜி.ஆர். பிரதிபலித்த அ.தி.மு.க.வின் ஆன்மாவை ஜெயலலிதா கட்டிக்காத்தார். தி.மு.க. இருக்கும் வரை அ.தி.மு.க. போன்ற எதிர் சக்தி அவசியம் இருக்கும். அ.தி.மு.க. சிதறினால் தி.மு.க.வை எதிர்கொள்ள எந்த உறுதியான தலைவர் முன்வருகிறாரே, அவர் கீழ் அ.தி.மு.க. மறு அவதாரம் எடுக்குமே தவிர, அது மறையாது என்பது நம் கணிப்பு. இதை நாம் அ.தி.மு.க. தலைமை முன் அறிவுரையாகவும், எச்சரிக்கையாகவும் வைக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.