காதலில் முறிவு ஏற்பட்டது ஏன்? – தேன்மொழி பரபரப்பு வாக்குமூலம்

395 0

சென்னை சேத்துப்பட்டு ரெயில் நிலையத்தில் வெட்டுப்பட்ட இளம் பெண் தேன்மொழி காதல் முறிவு குறித்து வாக்குமூலம் அளித்துள்ளார்.

தேன்மொழி நேற்று இரவு 10.30 மணி அளவில் கண் விழித்தார். அப்போது அவரிடம் டாக்டர்கள் விசாரித்தனர்.

டாக்டர்களிடம் அவர் கொடுத்த வாக்குமூலம் வருமாறு:-

நானும் சுரேந்தரும் கடந்த 3 ஆண்டுகளாக உயிருக்கு உயிராக காதலித்து வந்தோம். எங்களின் காதலுக்கு சாதி குறுக்கே வந்தது. நாங்கள் இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் எனது பெற்றோர் எங்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். நாங்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருந்தோம். ஆனால் எனது பெற்றோர் சுரேந்தருக்கு என்னை திருமணம் செய்து கொடுக்க மறுத்து விட்டனர். சுரேந்தரிடம் நான் பேசுவதற்கும் தடை விதித்தனர். இதனால் நான் அவரிடம் பேசுவதை நிறுத்திவிட்டேன். எங்கள் காதலும் முறிந்துபோனது.

இந்த நிலையில் நான் வேலை கிடைத்து கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் சென்னை வந்துவிட்டேன். இதையடுத்து சுரேந்தர் என்னை தொடர்பு கொண்டு பேச வேண்டும் என்று அழைத்தார். நானும் எனது நிலையை எடுத்துக்கூற சேத்துப்பட்டு ரெயில் நிலையம் சென்றேன். இருவரும் அங்கு பேசினோம். எனது நிலையை எடுத்துக்கூறினேன். ஆனால் எனது விளக்கத்தை அவர் ஏற்கவில்லை. இருவரும் காரசாரமாக பேசிக்கொண்டிருந்தோம். அப்போது திடீரென நான் எதிர்பாராத நிலையில் சுரேந்தர் என்னை அரிவாளால் வெட்டி விட்டார்.

இவ்வாறு அவர் கூறியதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.