எம்மை அழித்தவர்கள் ஒரு குடையின் கீழ் நிற்கும் போது நாம் ஏன்…..?

832 0

இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பதவி ஏற்ற பின் கடந்த 09 ஆம் திகதி சிறிலங்காவிற்கு சுற்று பயணம் மேற்கொண்டார்.

1987 ஆம் ஆண்டு அப் போதைய இந்திய பிரதமரான ராஜீவ் காந்தி சிறிலங்கா வந்து சிறிலங்காவின் அப்போதைய ஜனாதிபதி ஜே. ஆர் ஜெயவர்த்தனாவுடன் ஒப்பந்தம் ஒன்றை கைசாத்திட்டார்.. அந்த ஒப்பந்தமே ஈழத்தமிழர்களின் வாழ்வில் தீப்பந்தமாக மாறியது.

13 ஆவது திருத்தச்சட்டம் என்ற போர்வை ஒன்றை தமிழர்கள் மீது போர்த்து விட்டு ராஜீவ் காந்தி பறந்து சென்றார்.அந்த போர்வையால் மூடப்பட்ட ஈழத்தமிழர்களின் மூச்சு திணறி பாரிய வலியைச்சுமந்து வீறுகொண்டனர் .

ஈழத் தமிழர்கள் வலிகளின் வடுக்களை சுமந்து வலிமை பெற்றுக் கொண்டதுடன் . வீரத்துக்கும் உலகில் உதாரணமானார்கள். மேற்குலக வல்லாதிக்க மற்றும் பிராந்திய , ஏகாதிபத்திய அரசுகள் கூட்டுச்சேர்ந்து ஈழத் தமிழினத்தை இனப்படுகொலை செய்தார்கள்.

மீண்டும் பிராந்திய வல்  அரசான இந்தியா 13 ஆவது திருத்தச் சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டது.. இதே வேளை 13ஆவது சட்டத் திருத்தத்தின் அனைத்து அம்சங்களும் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும். தமிழர் பிரச்சனைக்கு நிரந்தரமான ஒரு தீர்வு காணப்பட வேண்டும் என ஈழத்தில் உள்ள தமிழ் அரசியல் தலைமைகள் தமது கதிரையை தக்க வைத்துக்கொள்ள அவ்வப்போது பேசி வருகின்றனர். அதுமட்டுமல்லாது 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த இந்தியா நேரடியாக தலையிட வேண்டும் என்கின்ற வகையில் தமிழ் அரசியல் தலைமைகள் பிதற்றுகிறார்கள்.

வடக்கு கிழக்கு இணைப்பு முற்றாக மறுக்கப்பட்டதுடன். காணி அதிகாரங்காரமோ காவல் துறை அதிகாரமோ இன்றுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை .

13 ஆவது திருத்தம் காற்றோடு கலந்து இந்தியக் கரையை அடைந்தது. மீண்டும் அது 13+ என்ற புதிய காற்றழுத்த தாழ் முக்கமாக ஈழத்தீவை மீண்டும் மையம் கொண்டுள்ளது.

13 ஆவது திருத்தமோ அல்லது 13+ திருத்தச் சட்டமோ தமிழர்களுக்கு எந்தவிதமான பயனையும் கொடுக்கவில்லை..
வடக்கு கிழக்கு இணைந்த கோட்பாடானது இந்தியாவின் 13 ஆவது திருத்தச்சட்டம் மூலம் சாத்தியப்படுமாயின் தமிழர்களின் வாழ்வில் ஒரு ஒளிக் கீற்றையாவது ஏற்படுத்தும்.

சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இந்திய பிதமர் நரேந்திர மோடியும் ஒரு குடைக்குள் நின்று 13+ என்ற மாயயைக் காட்டி தொடர்ந்தும் ஈழத்தமிழர்களை முழ்கடிகப்போகிறார்கள்.

ஈழத்திலும் புலத்திலும் வாழும் தமிழர்கள் ஒரு குடையின் கீழ் நின்று எமக்கான உரிமையை நாமே வென்றெடுப்போம்.