மக்கள் நலனுக்காக தே.மு.தி.க.வுடன் இணைந்து போராடுவோம்

269 0

201610170514395936_benefit-of-people-with-dmdk-congress-alliance_secvpfஅவசியம் ஏற்பட்டால் மக்கள் நலனுக்காக தே.மு.தி.க.வுடன் இணைந்து போராடுவோம் என விஜயகாந்தை சந்தித்த பின் சு.திருநாவுக்கரசர் கூறினார்.அவசியம் ஏற்பட்டால் மக்கள் நலனுக்காக தே.மு.தி.க.வுடன் இணைந்து போராடுவோம் என விஜயகாந்தை சந்தித்த பின் சு.திருநாவுக்கரசர் கூறினார்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக சு.திருநாவுக்கரசர் பொறுப்பேற்ற பிறகு, மரியாதை நிமித்தமாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறார். அந்த வகையில், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை, கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் நேற்று மதியம் 1.40 மணியளவில் சந்தித்தார். இந்த சந்திப்பு சுமார் ½ மணி நேரம் நடைபெற்றது.

இந்த சந்திப்பின் போது, தே.மு.தி.க. இளைஞர் அணி செயலாளர் எல்.கே.சுதீஷ், தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி, காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர்கள் கீழானூர் ராஜேந்திரன், சிரஞ்சீவி, மாநில சிறுபான்மை பிரிவு தலைவர் அஷலாம் பாஷா ஆகியோர் உடன் இருந்தனர்.

விஜயகாந்தை சந்தித்து விட்டு வெளியே வந்த சு.திருநாவுக்கரசர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை மரியாதை நிமித்தமாக, நட்பு ரீதியில் சந்தித்தேன். அப்போது உள்ளாட்சி தேர்தல் மற்றும் தற்போது இருக்கிற பொதுவான அரசியல் விஷயங்கள் குறித்து பேசினோம். தற்போது நாடாளுமன்ற தேர்தலோ, சட்டமன்ற தேர்தலோ நடைபெறவில்லை. கூட்டணி குறித்து பேச வேண்டிய அவசியம் இல்லை.

தே.மு.தி.க. சார்பில் உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்து இருக்கிறார்கள். காங்கிரசை பொறுத்தவரையில் தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதற்குள் உள்ளாட்சி தேர்தலுக்கு நீதிமன்றம் தடை விதித்து விட்டது.

உள்ளாட்சி தேர்தல் குறித்த வழக்குகள் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தில் இருக்கிறது. நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு தேர்தல் தேதி முறையாக அறிவிக்கப்பட்ட பிறகு இது சம்பந்தமான பேச்சுவார்த்தை மேலும் தொடரும்.

17, 18-ந் தேதிகளில் விவசாயிகள் அறிவித்துள்ள போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. முன்னாள் தலைவர் குமரிஅனந்தன் கன்னியாகுமரி மாவட்டத்தில் பங்கேற்கிறார். அதே போன்று முன்னணித் தலைவர்கள் ஆங்காங்கே நடைபெறும் போராட்டங்களில் பங்கேற்பார்கள்.

இது விவசாயிகள் சம்பந்தபட்ட பிரச்சினை என்பதால், தி.மு.க., தே.மு.தி.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

எதிர்காலத்தில், மதுவிலக்கு போன்ற போராட்டங்கள் வரும் போது, அதற்கான தேவை ஏற்படும் போது அவசியம் ஏற்பட்டால், மக்கள் நலனுக்காக தே.மு.தி.க.வுடன் இணைந்து ஒரே களத்தில் நின்று போராட்டம் நடத்துவோம்.

முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நலம் பூரண குணம் அடைய வேண்டும் என்று காங்கிரஸ் சார்பில் வேண்டுகிறோம். அவரை பற்றி வதந்திகளை யார் பரப்பினாலும், அது தவறு. வதந்தியை பரப்புபவர்கள் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதில் தவறு இல்லை. ஆனால், அந்த நடவடிக்கைகள் கட்சி கண்ணோட்டத்தோடு இருக்கக் கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.