அரசாங்கம் ஆளுமையற்ற தன்மையையும் மூடி மறைக்கவே அவசரகாலச் சட்டத்தைப் பிரயோகித்து வருகிறது-சிவசக்தி ஆனந்தன்

324 0

அரசாங்கம் தனது தவறுகளையும் கையாலகாத்தனத்தையும் அரசியல் ஆளுமையற்ற தன்மையையும் மூடி மறைப்பதற்காக அவசரகாலச் சட்டத்தைப் பிரயோகித்து மக்களை அச்சுறுத்தி வருகிறது என வன்னி மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

அவசரகால சட்டம் தொடர்பில் ஊடகவியலாளர் ஓருவர் இன்று எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த நாடு ஒரு போதும் ஜனநாயக சூழலில் அமைதியான முறையில் இயங்கத் தகுதியற்றதோ என்ற சந்தேகத்தையே அண்மைய அவசரகால சட்டம் எழுப்பியுள்ளது. ஜே.ஆரின் ஆட்சியிலிருந்து மகிந்தவின் ஆட்சிக்காலம் வரை அவசரகாலச் சட்டம் அமுலில் இருந்தது. பின்னர் அதன் முக்கிய சரத்துக்கள் சில பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் இணைக்கப்பட்டு அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டது.

அது வரை மாதந்தோறும் அவசரகாலச் சட்டத்தின் மீது பாராளுமன்றத்தில் சம்பிரதாயத்திற்காக வாக்கெடுப்பு நடப்பதும் அது வெற்றியடைவதும் கடந்தகால வரலாறு. உங்களால் முடிந்தால், இந்த அவசரகாலச் சட்டத்தையும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தையும் நீக்கிப் பாருங்கள் உங்களால் ஒரு நாள் கூட ஆட்சி செய்ய முடியாது என்று கூறியிருந்தேன். அந்த அளவிற்கு இந்த நாட்டின் உயர் பதவியில் இருப்பவர்கள் ஆளுமை அற்றவர்கள். அதனை நிரூபிப்பது போலவே இன்றைய அரசாங்கத்தின் செயற்பாடு அமைந்துள்ளது.

இன்றைய அரசாங்கம் தனது தவறுகளையும் கையாலகாத்தனத்தையும் அரசியல் ஆளுமையற்ற தன்மையையும் மூடி மறைப்பதற்காக அவசரகாலச் சட்டத்தைப் பிரயோகித்து மக்களை அச்சுறுத்தி வருகிறது.