டென்மார்க் தலைநகரில் இரண்டாவது நாளாக தமிழின அழிப்பிற்கு நீதி கோரி கண்காட்சி!

494 0

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் கவனயீர்ப்பு நிகழ்வும் கண்காட்சியும் டென்மார்க்
தலைநகர நகரசபை முன்றலில் இன்று (14.05.19) உணர்வுபூர்வமாக இன அழிப்பு செய்யப்பட்ட
மக்களை நினைவு கூர்ந்து ஈகச்சுடரேற்றி அகவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது.

தமிழருடைய போராட்ட வரலாற்றில் மிகப் பெரிய அழிவுகளை ஏற்படுத்தியது மே 18.
முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழ் மக்களை சிங்கள பேரினவாத அரசு திட்டமிட்டு படுகொலை
செய்தது. எம் மக்களுக்கு நீதி வேண்டியே இக்கண்காட்சியை நடத்துகின்றோம்.
தமிழின அழிப்பை எடுத்துரைக்கும் கண்காட்சியை பல்லின மக்கள் கவனத்துடன் வந்து பார்த்ததை
அவதானிக்கக் கூடியதாக இருந்தது. பல்லின மக்களுக்கு துண்டுப்பிரசுரமும் வழங்கி Slagelse ,
மற்றும் Nykøbing.SJ நகர செயற்பாட்டாளர்கள் அவர்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர்.

இன்று 14.05.19 கண்காட்சி நடந்த இடம் பல்லின மக்கள் கூடுதலாக வந்து போகும் இடமாக
இருப்பதால் எங்கள் மக்களின் அவலநிலையை கண்காட்சி பதாகைகள் ஊடாக அறிந்திருப்பார்கள்
என்ற நம்பிக்கை எங்களிடம் உள்ளது.
2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் தமிழினம் கொடூரமாக அழிக்கப்பட்டு 10 ஆண்டு நிறைவு
காணுகின்றது. இன்னும் எங்களின் மக்களிற்கு எந்த வித தீர்வும் கிடைக்கவில்லை . எமக்கு நீதி
கிடைக்கும் வரை நாம் ஓயமாட்டோம் என சர்வதேசத்திற்கு சொல்லும் முகமாக இக் கண்காட்சியை
நடத்துகின்றோம்.அத்துடன் மாபெரும் எழுச்சி பேரணி 18.05.19 அன்று நடைபெறும். அதில்
அனைவரும் கலந்து கொள்ளவும்.

நாளைய தினம் 15.05.19 அன்று தமிழின அழிப்பு கண்காட்சி டென்மார்க் தலைநகர Gammeltorv
முன்றலில் நடைபெறும்.

டெனிஸ் தமிழ் அமைப்புகளின் ஒன்றியம்.