பிரான்சு பரிசில் தமிழின அழிப்பினை உணர்த்தும் கலைஞர்களின் தெருவெளி ஆற்றுகை!

537 0

பிரான்சு பரிசில் தமிழின அழிப்பினை உணர்த்தும் கலைஞர்களின் தெருவெளி ஆற்றுகை!
சிறிலங்கா அரசினால் திட்டமிட்டு நடாத்தப்பட்ட தமிழின அழிப்பின் அதி உச்சநாளாம் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு பிரான்சு பாரிசில் லாச்சப்பல் பகுதியில் கலைஞர்கள் பறையிசையோடு முள்ளிவாய்க்கால் நினைவு சுமந்த பாடல்களைப் பாடி கொட்டொலி முழங்க கவனயீர்ப்பை நடாத்தி வருகின்றனர்.

பிரான்சில் தற்போது தொடர்ச்சியாக கடும் மழை பெய்துவரும் நிலையிலும் கலைஞர்கள் சோர்ந்துவிடாமல் தமது அறைகூவலைச் செய்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இது எமது மக்களை மட்டுமல்லாமல் வெளிநாட்டவர்களையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. பல வெளிநாட்டவர்களும் தமது கைபேசிகளில் இதனை காணொளி எடுத்துச் சென்றதையும் காணமுடிந்தது.

இந்த 10 ஆவது ஆண்டில் எமது மக்கள் அலையெனத் திரண்டு எமக்கு ஏற்பட்ட அநீதிக்கு – கொடுமைகளுக்கு நீதிகிடைக்க சர்வதேசத்தின் முன் நிற்கவேண்டும் என கலைஞர்கள் கோரிக்கையை முன்வைத்தவாறே தமது தெருவெளி ஆற்றுகையை வெளிப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு)