எம் தமிழ் உறவுகளே! மே 18ல் திரள்வோம் – வன்னியூர்க் குருஸ் –

594 0

எம் தமிழ் உறவுகளே!
மே 18ல் திரள்வோம்.
*** ****

முள்ளிவாய்க்கால் என்னும் பெரிய இன அழிப்பு வலையத்தை முடித்தபின்
எஞ்சிய நாம் பத்தாண்டு காலம் கடந்தும்
பெருவலியோடு பேரெழுச்சி கொண்டு நிற்க,
உலகம் முழுவதும் பரந்து வாழும் தமிழினத்தை
பெரியதோர் இன அழிப்பின் வட்டத்தினுள்ளே வைத்து.
உலக அரங்கின் பிடியிலிருந்து தன்னைத் தானே தப்பவைத்துக்கொள்ள
திட்டமிட்ட முறையில் தந்திரமாய் பல நகர்வுகளை நகர்த்தி,
மதத்தின் பெயரால் இன்னுமொரு சிறு முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நடத்தப்பட்டிருக்கிறது….

எம் இனத்தைக் கொன்று தன் மக்கள் என்று தப்பட்டமடித்து
முகம் மூடிய உலகப் பயங்கரவாதிகளின் செயல் எனச் சாடி,
உலகின் அனுதாபத்தையும் ஆதரவையும் பெற்று
நாடகமாடிக்கொண்டிருக்கிறது ஶ்ரீலங்காவின்
நாசகாரப் பெரும் பயங்கரவாத அரசு….

பாதுகாப்பு முகத்திரைகள் போட்டு தமிழினப் படுகொலையை
இன்னும் மும்முரமாக முன்னெடுக்கும் ஶ்ரீலங்கா அரசை
உலக மேடையில் ஏற்றி அதன் உண்மை முகத்தை காட்டவும்,
எமக்கான நீதியையும் சுதந்திரத்தையும் கேட்கவும்,
ஒற்றுமையின் கரம் கோர்த்து நின்று ஒன்றிணையும் ஓர் இனமாய்
மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு உங்களையும்
ஒருசேர அழைக்கின்றோம்
வாரீர்….!

– வன்னியூர்க் குருஸ் –