பிரான்சு பரிசில் பல்நாட்டவர்களுடன் இடம்பெற்ற தொழிலாளர் நாள் எழுச்சிப் பேரணி!

481 0

பிரான்சில் பாரிஸ் montparnasse பகுதியில் இருந்து பிற்பகல் 14.00 மணியளவில் பல்நாட்டவர்களுடனும் ஆரம்பித்த மே 1 தொழிலாளர் நாள் பேரணி பாரிஸின் பிரதான வீதிகளின் ஊடாக நகர்ந்து Porte de italy வரை இடம்பெற்றது. பிரான்ஸ் தொழிற்சங்கங்களும் வெளிநாட்டவர்களுடன் இணைந்து பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நிகழ்வில் தமிழ் மக்கள் உணர்வெழுச்சியுடன் கலந்துகொண்டிருந்தனர். பல்வேறுபட்ட இனங்களினதும் கட்சிகளினதும் அமைப்புகளினதும் ஒன்றிணைந்த அணிவகுப்புக்கு மத்தியில் தமிழ் மக்களின் பேரணியும் இடம்பெற்றது. இம்முறையும் சில அசம்பாவிதங்கள் இடம்பெற்றுள்ளபோதும் பிரெஞ்சுக்காவல்துறையின் அதி உச்ச பாதுகாப்புக்காரணமாக அவை தவிர்க்கப்பட்டிருந்தன.

ஊர்வலத்தின் நிறைவில் பிரான்சு தமிழீழ மக்கள் பேரவைப் பொறுப்பாளர் திருச்சோதி அவர்கள் உரை நிகழ்த்தியிருந்தார், அவர் தனது உரையில், பல கெடுபிடிகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தபோதும், இந்நிகழ்வில் உறுதியோடு கலந்துகொண்டவர்களை பாராட்டியிருந்ததுடன், தாயகத்தில் குறித்த தொழிலாளர் நாள் இடம்பெறாதபோதும், தமிழ் மக்களின் சார்பில் நாமே இப்போராட்டத்தை முன்னெடுக்கின்றோம் எனவும் தெரிவித்திருந்தார். நிறைவாகத் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் பேரணியில் கலந்துகொண்டவர்கள் அமைதியாக கலைந்துசென்றனர். இம்முறை பிரான்சில் அதியுச்ச பாதுகாப்புக்கு மத்தியில் பெரும் எண்ணிக்கையான காவல்துறையினர் புடைசூழ தொழிலாளர் நாள் பேரணி நடைபெற்றுமுடிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.