பிரான்சில் தமிழ்மொழி பொதுத் தேர்வு 2019 இற்கான மேற்பார்வையாளர் நடத்துநருக்கான செயலமர்வு!

621 0

தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியகம் வருடாந்தம் நடாத்தும் தமிழ்மொழி பொதுத் தேர்வு மற்றும் புலன் மொழி வளத்தேர்வு – 2019 இல் கலந்துகொள்ளும் மேற்பார்வையாளர்கள், தேர்வு நடத்துநர்கள், தமிழ்ச்சோலைப் பள்ளி ஆசிரியர்கள் ஆகியோருக்கான தேர்வு தொடர்பான செயலமர்வு தமிழ்ச்சோலை தலைமைப் பணியகத்தின் ஏற்பாட்டில் நேற்று (28.04.2018) ஞாயிற்றுக்கிழமை குசான்வீல் பகுதியில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. தமிழர் தாயகத்திலும் சிறிலங்காதேசத்திலும் தீவிரவாதத் தாக்தலில் படுகொலை செய்யப்பட்ட மக்களின் நினைவாக சுடர் ஏற்றப்பட்டது. சுடரினை தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகப் பொறுப்பாளர் திரு.ஜெயக்குமார் ஏற்றிவைத்தார்.

அகவணக்கத்தைத் தொடர்ந்து தமிழ்ச்சோலை கீதத்துடன் காலை 9.30 மணியளவில் செயலமர்வு ஆரம்பமாகியது. ஒருநாள் செயலமர்வாக இடம்பெற்ற இந்நிகழ்வில் சுமார் 300 இற்கும் மேற்பட்ட தமிழ்ச்சோலை ஆசிரிய, ஆசிரியைகள், நிர்வாகிகள் கலந்துகொண்டு தேர்வு தொடர்பான சந்தேகங்களை கேட்டுத்தெரிந்துகொண்டனர். தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் சார்பில் திரு.அகிலன், திரு.மகிந்தன், திரு.காணிக்கைநாதன் ஆகியோர் தேர்வுதொடர்பான அறிவுறுத்தல்களை கையேடுகளுடன் சிறப்பாக வழங்கியிருந்தனர். தொடர்ந்து தேர்வுகளில் பங்குபற்றுவோருக்கான அடையாள அட்டைகளும் வழங்கிவைக்கப்பட்டன. செயலமர்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் சிற்றுண்டி, தேநீர், மதிய உணவு என்பன வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இச்செயலமர்வில் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் துணைப்பொறுப்பாளர் திரு.சுரேஸ் அவர்கள் கலந்துகொண்டு கருத்துக்களைப் பகிர்ந்திருந்தார்.எமது குழந்தைகளுக்கு போதிக்கும் ஆசிரியர்களின் பணியைப் போற்றியதுடன் இவ்வாறான ஆசிரியர்களின் முன்னால் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வதில் தான் பெருமைகொள்வதாகத் தெரிவித்திருந்தார்.

இன்று தமிழர் தாயகத்திலும் சிறிலங்கா தேசத்திலும் இடம்பெறும் அனர்த்தங்கள் குறித்துத் தெரிவித்திருந்த அவர், எதிர்வரும் மே 18 ஆம் நாள் நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து பேரணியில் கலந்துகொள்ளவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியிருந்தார். இம்முறை பிரான்சில் Île De France மற்றும் பிரான்சின் வெளிமாவட்டங்களிலும் (ஸ்ரார்ஸ்பேர்க்,நீஸ்,போர்சோலை,முலுஸ்,துளுஸ்,றென்,தூர்,ஜியான்,போ,போர்தோ1, போர்தோ2, நெவர்) மொத்தம் 5 ஆயிரத்து 745 மாணவர்கள் தேர்வுக்குத் தோற்றவுள்ளதுடன் 300 இற்கு மேற்பட்ட ஆசிரியர்களும் கடமையாற்றவுள்ளனர். வரும் 04.05.2019 சனிக்கிழமை 35 தேர்வு நிலையங்களிலும் வரும் 05.05.2019 ஞாயிற்றுக்கிழமை 18 தேர்வு நிலையங்களிலும் 12.05.2019 ஞாயிற்றுக்கிழமை 30 தேர்வு நிலையங்களிலும் புலன்மொழி வளத்தேர்வு கேட்டல், பேசுதல், வாசித்தல் என்ற பிரிவுகளில் நடைபெற ஏற்பாடகியுள்ளதாகவும் தமிழ்மொழி பொதுத் தேர்வு வரும் 01.06.2019 சனிக்கிழமை LA MAISON DE EXAMENS 7,RUE RUE ERNEST RENAN 94114 ARCEIL (RER – B LA PLACE) என்ற முகவரியில் இடம்பெறவுள்ளதாகவும் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் தெரிவித்துள்ளது

. நிறைவாக தமிழ்த்தாய் வாழ்த்து ஒலித்ததைத்தொடர்ந்து செயலமர்வு இனிதே நிறைவடைந்தது.

(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு)