அபுதாபியில் உலக வங்கியின் கிளை அலுவலகம் – ஒப்பந்தம் கையெழுத்தானது

3222 0

துபாயில் நடந்த உலக அரசு உச்சி மாநாட்டில், அபுதாபியில் உலக வங்கியின் கிளை அலுவலகம் திறக்க ஒப்பந்தம் கையெழுத்தானது. 

துபாய் மதினத் ஜுமைராவில் உலக அரசு உச்சி மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் 140 நாடுகளைச் சேர்ந்த 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

அபுதாபியில் உலக வங்கியின் கிளை அலுவலகம் திறக்க இந்த மாநாட்டில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்நிலையில் அமீரக நிதித்துறை துணை மந்திரி ஒபைத் ஹுமைத் அல் தயார் மற்றும் உலக வங்கி குழும மத்திய கிழக்கு பகுதிக்கான துணைத்தலைவர் பரித் பெல்கஜ் ஆகியோர் முன்னிலையில் அபுதாபி குளோபல் மார்க்கெட்டின் தலைமை செயல் அலுவலர் காலித் அல் சுவைதி மற்றும் உலக வங்கி வளைகுடா நாடுகளுக்கான இயக்குனர் இசாம் அபுசுலைமான் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இதன் மூலம் உலக வங்கியின் கிளை அலுவலகம் அபுதாபி குளோபல் மார்க்கெட்டில் விரைவில் திறக்கப்படும். இந்த அலுவலகம் கொள்கை முடிவுகள் தொடர்பான ஆய்வுகள், அரசுத்துறைகளின் மேம்பாட்டு திட்டங்களுக்கு தேவையான தொழில்நுட்ப உதவியை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு உதவியாக இருக்கும்.

அமீரக துணை மந்திரியும், அபுதாபி குளோபல் மார்க்கெட்டின் தலைவருமான அகமது அலி அல் சயீக் கூறும்போது, “உலக வங்கியின் புதிய கிளை அலுவலகம் அமீரக பொருளாதார மேம்பாட்டுக்கு உதவியாக இருக்கும். மேலும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், சுகாதாரப் பணிகளை மேற்கொள்ளவும் உதவும்” என்றார்.

Leave a comment