தகவல் தொடர்பு வசதிக்காக ஜிசாட்-31 செயற்கைகோள் 6-ந் தேதி விண்ணில் ஏவப்படுகிறது

356 0

தகவல் தொடர்பு வசதிக்காக ‘ஜிசாட்-31’ செயற்கை கோள் பிரெஞ்ச் கயானாவில் இருந்து 6-ந் தேதி விண்ணில் ஏவப்படுகிறது.

நமது நாட்டில் தகவல் தொடர்பு வசதிகளைப் பெருக்கும் வகையில், அதிநவீன தகவல் தொடர்பு செயற்கை கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் 40-வது தகவல் தொடர்பு செயற்கைகோளாக ‘ஜிசாட்-31’ என்ற செயற்கை கோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான ‘இஸ்ரோ’ உருவாக்கி உள்ளது.

இந்த செயற்கை கோள், 6-ந் தேதி பிரெஞ்ச் கயானாவில் உள்ள கொரூவ்வில் இருந்து கனரக ஐரோப்பிய ராக்கெட்டான ‘ஏரியன்-5’ மூலம் விண்ணில் ஏவப்படுகிறது.

விண்ணில் ஏவப்படுவதற்காக ‘ஜிசாட்-31’ செயற்கை கோள், கொரூவ் நகருக்கு கொண்டு செல்லப்பட்டுவிட்டதாக ‘இஸ்ரோ’ நேற்று கூறியது.

‘ஜிசாட்-31’ செயற்கைகோள் 2 ஆயிரத்து 535 கிலோ எடை கொண்டதாகும்.

இதன் ஆயுள் காலம் 15 ஆண்டுகள் ஆகும். இது ‘இஸ்ரோ’வின் ‘1-2கே பஸ்’ வகையின் மேம்படுத்தப்பட்ட செயற்கை கோள்.

இதன்மூலம் இந்தியாவின் மையப்பகுதியும், தீவுப்பகுதியும் பலன் அடையும்.

‘ஜிசாட்-31’ செயற்கை கோள், விசாட் நெட்வொர்க், டெலிவிஷன் இணைப்பு, டிஜிட்டல் செயற்கைகோள் செய்தி சேகரிப்பு, டி.டி.எச். டெலிவிஷன் சேவை, செல்போன் சேவை ஆகியவற்றுக்கும் பயன்படும்.

இந்த செயற்கை கோள், இரண்டே மாதங்களில் கொரூவ்வில் இருந்து விண்ணில் செலுத்தப்படுகிற ‘இஸ்ரோ’வின் இரண்டாவது செயற்கைகோள் என்ற சிறப்பை பெறுகிறது.

கடந்த டிசம்பர் மாதம் 5-ந் தேதி 5 ஆயிரத்து 854 கிலோ எடை கொண்ட ‘ஜிசாட்-11’ செயற்கை கோள், கொரூவ்வில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது நினைவுகூரத்தக்கது. 

Leave a comment