முகமது அலி ஜின்னா வீடு எங்களுக்கு சொந்தமானது – பாகிஸ்தான் கூற்றுக்கு இந்தியா மறுப்பு!

272 0

மும்பையில் உள்ள முகமது அலி ஜின்னா வீடு தங்களுக்கு சொந்தமானது என்று பாகிஸ்தான் கூறியிருப்பதற்கு இந்திய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

மும்பை மலபார் ஹில் பகுதியில் முகமது அலி ஜின்னா 1930-ம் ஆண்டுகளில் வாழ்ந்த வீடு உள்ளது. அந்த வீடு சீரமைக்கப்பட்டு, இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படுவதாக மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் கூறியிருந்தார். இப்போது பாகிஸ்தான் அதனை உரிமை கொண்டாடி உள்ளது.

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் முகம்மது பைசல் கூறும்போது, “மும்பையில் உள்ள முகமது அலி ஜின்னா வீடு பாகிஸ்தானுக்கு சொந்தமானது என்பதை இந்தியா ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ளது. அதனை இப்போது வேறு யாரும் உரிமை கொண்டாட அனுமதிக்க மாட்டோம்” என்றார்.

ஆனால் இந்தியா இதனை மறுத்துள்ளது. இந்திய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரவேஷ்குமார் கூறும்போது, “ஜின்னா வீடு இந்திய அரசுக்கு சொந்தமானது. அதனை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார். 

Leave a comment