காஞ்சிரம்குடா படுகொலையின் 16 ஆவது ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு

267 0

அம்பாறை -திருக்கோவில் பிரதேசத்தில் இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இழக்காகி உயிர்நீர்த்த மாணவர்கள் உட்பட ஏழு பேரின் 16ஆவது ஆண்டு படுகொலை நினைவேந்தல் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை தாய்மார்கள் தங்களின் பிள்ளைகளின் உருவப்படங்களுக்கு மலர்மாலை அணிவித்து அகழ் விளக்கேற்றி கண்ணீரோடு அனுஷ்டித்தனர்.

குறித்த படுகொலை நினைவேந்தல் அனுஷ்டிப்பானது அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத் தலைவி தம்பிராசா செல்வராணியின் தலைமையில் திருக்கோவில் 02 சுப்பர்ஸ்டார் விளையாட்டுத் திடலுக்கு அருகாமையில் அமைந்துள்ள நினைவுத் தூபியில் இடம்பெற்றது.

இதன்போது பொது அகழ் விளக்கு ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து ஆத்தம சாந்தி வேண்டிய மௌனம் வணக்கத்துடன் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அரிநாயகம் சந்திரநேரு அவர்களின் உருவப்படத்திற்கு அவரது மனைவி மலர்மாலை அணிவித்து தீபச் சுடர் ஏற்றினார்.

இதனை தொடர்ந்து  பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து தீபம் ஏற்றி பிரார்த்தனைகளில் ஈடுபட்டதுடன் அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத் தலைவி தம்பிராசா செல்வராணியினால் நினைவுப் பேருரை ஒன்றும் நிகழ்த்தப்பட்டது.

குறித்த படுகொலை நினைவேந்தல் அனுஷ்டிப்பில் திருக்கோவில் பிரதேசத்தில் இருந்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட உறவுகள் கலந்து கொண்டு கண்ணீரோடு மலர் தூவி மரணித்த உயிர்களின் ஆத்தம சாந்தி வேண்டி பிராத்தித்து இருந்தனர்.

குறித்த படுகொலை சம்பவமானது கடந்த 2002ஆம் ஆண்டு ஒக்டோர் மாதம் 09திகதி மாலை சமாதான காலத்தில் காஞ்சிராம்குடா இராணுவ முகாமினை நோக்கி இடம்பெற்ற ஒரு ஆர்ப்பாட்டத்தின் போது துப்பாக்கிச் சூட்டுக்கு இழக்காகி மாணவர்கள் உட்பட ஏழு பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment