நவீன வசதிகளுடன் கூடிய மாதவரம் மாடி பஸ் நிலையம் எடப்பாடி பழனிசாமி 10-ந்தேதி திறந்து வைக்கிறார்!

265 0

சென்னை மாதவரம் ரவுண்டானா அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள மாடி பஸ் நிலையத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 10-ந்தேதி (புதன்கிழமை) திறந்து வைக்கிறார். இதனால் கோயம்பேடு பஸ் நிலையத்தில் போக்குவரத்து நெரிசல் முற்றிலுமாக குறையும்.

சென்னை, கோயம்பேட்டில் வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களுக்கு இயக்கப்படும் பஸ்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மாதவரத்தில் கீழ்த்தளம் மற்றும் மேல்தளத்துடன் மாடி பஸ்நிலையம் அமைக்கப்படும் என்று கடந்த 2011-ம் ஆண்டு அறிவித்தார்.

இதையடுத்து பஸ்நிலையம் அமைப்பதற்காக மாதவரம் ரவுண்டானா அருகே 8 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து புதிய பஸ்நிலையத்தை அமைத்து நிர்வகிக்கும் பொறுப்பு சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்திடம் (சி.எம்.டி.ஏ.) ஒப்படைக்கப்பட்டது. பின்னர் ரூ.95 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த 2016-ம் ஆண்டு பணிகள் தொடங்கியது.

தற்போது மாடி பஸ் நிலைய கட்டிடம், டிரைவர்கள், கண்டக்டர்கள், பயணிகள் ஓய்வு எடுப்பதற்காக விசாலமான அறைகள், ஓட்டல்கள், வணிக வளாகம், தாய்மார்கள் பாலூட்டும் அறை போன்றவை நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் தனித்தனியாக நிறுத்துவதற்கு வசதி, இலவச குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரி கார் போன்ற வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

சமூக விரோதிகள், திருடர்கள் நடமாட்டத்தை கண்காணிப்பதற்காக நவீன சுழலும் கண்காணிப்பு கேமராக்கள், போலீஸ் கட்டுப்பாட்டு அறை போன்ற பாதுகாப்பு அம்சங்களுக்கும் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. பஸ் நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான பணிகள் முடிவடைந்து உள்ளன. அந்தவகையில் கடந்த ஜூன் மாதம் 25-ந்தேதி 2 பஸ்கள் இயக்கி ஒத்திகை பார்க்கப்பட்டது. கீழ்த்தளத்தில் இருந்து மேல் தளத்துக்கும், அங்கிருந்து கீழ் தளத்துக்கும் வளைவுகள் மூலம் பஸ்கள் இயக்கப்பட்டன.

மாதவரம் மாடி பஸ் நிலையத்தில் இருந்து ஸ்ரீகாளகஸ்தி, திருப்பதி, நெல்லூர், விஜயவாடா என ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. கோயம்பேடு, பாரிமுனை போன்ற பகுதிகளுக்கு மாநகர பஸ்கள் இயக்கப்பட இருக்கிறது. பஸ் நிலையத்தின் மேல் தளத்தில் 50 பஸ்களும், கீழ் தளத்தில் 42 வெளியூர் பஸ்களும் (ஆந்திரா மார்க்கம்), 9 மாநகர பஸ்களும் நிறுத்த கூடிய வகையில் பிளாட்பாரம் அமைக்கப்பட்டுள்ளது.

பஸ்நிலையத்தை பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் வருகிற 10-ந்தேதி (புதன்கிழமை) முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாதவரம் மாடி பஸ்நிலையத்தை திறந்து வைக்கிறார். இந்த பஸ்நிலையத்துக்கு ‘இண்டர்சிட்டி பஸ் டெர்மினல்’ (நகரத்தின் உள்ளே, வெளியே செல்லும் பஸ் முனையம்) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் அன்று முதல் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களுக்கு செல்லும் பஸ்கள் இங்கிருந்தே புறப்படும். அந்த மாநிலங்களில் இருந்து வரும் பஸ்கள் மாதவரம் மாடி பஸ் நிலையத்தில் நிறுத்தப்படும். இதன் மூலம் கோயம்பேடு பஸ் நிலையத்தின் போக்குவரத்து நெரிசல் முற்றிலும் குறைந்துவிடும்.

இதுகுறித்து சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் உறுப்பினர் செயலாளர் ராஜேஷ் லக்கானி கூறும் போது, ‘சி.எம்.டி.ஏ. நிர்வாகம் கோயம்பேடு பஸ் நிலையத்தை போன்றே மாதவரம் பஸ்நிலையத்தையும் நவீன முறையில் அமைத்துள்ளது. மாடி பஸ் நிலையம் மாதவரத்தின் முக்கிய அடையாளமாக திகழும்’ என்றார்.

Leave a comment