பாகிஸ்தான் முன்னாள் நிதி மந்திரி இஷாக் தர்ரின் வங்கிக்கணக்குகளை முடக்கவும், அவரது சொத்துக்களை ஏலத்தில் விற்பனை செய்யவும் அனுமதி வழங்கி நீதிபதி முகமது பஷீர் நேற்று தீர்ப்பு அளித்தார்.
பாகிஸ்தானில் நவாஸ் ஷெரீப் பிரதமராக இருந்தபோது, நிதி மந்திரி பதவி வகித்தவர் இஷாக் தர் (வயது 67). இவர் ‘பனாமா கேட்’ ஊழல் வழக்கில் சிக்கினார். இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இவர் மீது தேசிய பொறுப்புடைமை அமைப்பு 4 ஊழல் வழக்குகளை பதிவு செய்துள்ளது. இவர் தலைமறைவாக உள்ளார். இவரது வங்கிக்கணக்குகளை முடக்க வேண்டும், சொத்துக்களை ஏலத்தில் விற்பனை செய்ய வேண்டும் என்று கோரி இஸ்லாமாபாத் தேசிய பொறுப்புடைமை கோர்ட்டில் தேசிய பொறுப்புடைமை அமைப்பு மனு தாக்கல் செய்தது.

இந்த மனுவை நேற்று முன்தினம் விசாரித்த நீதிபதி முகமது பஷீர், அதன் தீர்ப்பை ஒத்தி வைத்தார்.
இந்த நிலையில் இஷாக் தர்ரின் வங்கிக்கணக்குகளை முடக்கவும், அவரது சொத்துக்களை ஏலத்தில் விற்பனை செய்யவும் அனுமதி வழங்கி நீதிபதி முகமது பஷீர் நேற்று தீர்ப்பு அளித்தார். ஏலத்தை நடத்த வேண்டிய பொறுப்பினை பஞ்சாப் மாகாண அரசு ஏற்று செயல்படுத்த வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
லாகூர், இஸ்லாமாபாத் நகரங்களில் உள்ள இஷாக் தர்ரின் அசையும் சொத்துக்களையும், அசையா சொத்துக்களையும் தேசிய பொறுப்புடைமை அமைப்பு ஏற்கனவே முடக்கி வைத்துள்ளது நினைவுகூரத்தக்கது.

