தமிழ் மொழியின் தொன்மையையும் செழுமையையும் கண்டு பயந்ததாலேயே இரண்டாம்தர மொழியாக்குவதற்கு முயற்சிக்கின்றனர்!

452 0

தமிழ் மொழியின் தொன்மையையும் அதன் செழுமையையும் எதிரிகள் பார்த்து பயந்ததாலேயே தமிழை இரண்டாம் தர மொழியாக மாற்றுவதற்கு முயற்சிக்கின்றனர் என வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கத்தினால் வருடம் தோறும் முன்னெடுக்கப்பட்டுவரும் வட மாகாண பண்பாட்டுப்பெருவிழா நேற்று கற்சிலைமடு பண்டாரவன்னியன் வித்தியாலயத்தில் இடம் பெற்றது.  இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்.

1944 ஆண்டு இலங்கை வெள்ளையர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த வேளை வெள்ளையர்கள் தமது நிர்வாகத்தை நடத்துவதற்கு இங்குstate counsel என்று ஒரு நிர்வாக கட்டமைப்பை வைத்திருந்தார்கள். அந்த கட்டமைப்பில் ஜெ ஆர் ஜெயவர்த்தனாவும் இருந்தார் அந்த state counsel இல் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தார்.

அதாவது சிங்களம் மட்டும் இலங்கையிலே அரசகரும மொழியாக வேண்டும் என முன்மொழிந்தார். அதனை எதிர்த்து தமிழ் V.Aகந்தையா என்கின்ற தமிழ் நாடாழுமன்ற உறுப்பினர் சிங்களம் மட்டுமல்ல தமிழும் அரசகரும மொழியாக்கப்பட வேண்டும் என்ற திருத்தத்தை முன்மொழிந்தார் இதனை அப்போது S.W.R.D.பண்டாரநாயக்கா வழிமொழிந்தார். இதற்கு ஜெயவர்த்தனா ஒரு விளக்கம் சொன்னார்.

இந்த திருத்தத்தை ஏற்க முடியாது. இலங்கையில் இருந்து 18 கிலோமீற்றர் தூரத்தில் தமிழ் நாடு இருக்கிறது அங்கு தமிழ் மிகவும் செழுமையுடன் இப்போதும் இருக்கிறது. எனவே இங்கு தமிழையும் அரசகரும மொழியாக கொண்டுவந்தால் சிங்கள மக்கள் தமிழை கற்றுவிடுவார்கள் சிங்கள மக்கள் தமிழை கற்றார்களானால் தமிழ் இலக்கியங்களில் உள்ள அவர்களது கலை,பண்பாட்டு விழுமியங்களை கற்று விடுவார்கள். அப்படி தமிழ் இலக்கியங்களை கற்பதால் சிங்களவர்கள் தங்களது அடையாளங்களை இழந்து விடுவார்கள் அதனால் தமிழை அரசகரும மொழியாக மாற்றக்கூடாது என்று வாதிட்டார்.

இதன் பின்னர் அந்த தீர்மானம் கைவிடப்பட்டடிருந்தது. பின்னர் S.W.R.D.பண்டாரநாயக்கா ஆட்சியை கைப்பற்றியதும் அவரும் ஜெயவர்தனா கூரிய அதே கருத்தையே கொண்டிருந்தார்.  இதை ஏன் நான் இங்கு சொல்கிறேன் என்றால் எங்கள் எதிரிகளுக்கு தமிழ் மேல் இருக்கின்ற பயத்தின் காரணமாகத்தான் தமிழை இரண்டாம் தர மொழியாக மாற்றத்துடிக்கின்றனர்.

ஆனால் கடந்த 70 ஆண்டுகளாக தமிழ் மொழிக்காக போராடி இப்போது தமிழையும் அரசகரும மொழியாக மாற்றியிருக்கிறோம். அந்த வகையிலே எங்களுடைய பண்பாடுகளை,பாரம்பரியங்களை நாங்கள் பாதுகாக்க வேண்டும்.

இந்த 70 ஆண்டு கால போராட்டத்திலே இலங்கை அரசினுடைய எல்லா துறைகளும் தமிழ் மக்களுடைய வரலாறுகளை அழிப்பதில் போட்டி போட்டு செயற்படுகின்றன. எமது கலை,பண்பாட்டு விழுமியங்களைப் பாதுகாக்க பல முனைகளிலே நாம் பேராடவேண்டும். என்றார்.

இரண்டு நாட்கள் இடம் பெற்ற வடக்கு மாகாண பண்பாட்டுப்பெருவிழாவில் மாகாணத்தில் சிறந்த கலைஞர்கள் மதிப்பளிக்கப்பட்டதுடன் அவர்களில் தெரிவு செய்யப்பட்டோருக்கு வடக்கு மாகாணத்தின் அதி உயர் விருதான முதலமைச்சர் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

Leave a comment