திலீபனின் நினைவேந்தலை முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி

464 0

தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை நிறுத்தும்படி யாழ்.பொலிஸார் தாக்கல் செய்திருந்த கோரிக்கை மனுவை யாழ்.நீதிவான் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

திட்டமிட்டபடி நாளை நல்லூரில் தியாக தீபம் திலீபனின் இறுதிநாள் நினைவேந்தல் இடம்பெறவுள்ளதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் , ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நல்லூரில் அமைந்துள்ள தியாகி தீபம் திலீபனின் நினைவு தூபியை சூழவுள்ள சுற்றுவேலிகள் மற்றும் நினைவேந்தலுக்காக போடப்பட்டுள்ள கொட்டகைகள் மற்றும் உருவப்படங்களை அகற்றும்படியும், நினைவேந்தலை நிறுத்தும்படியும் மாநகரசபை ஆணையாளருக்கு அவசர உத்தரவினை வழங்குமாறு யாழ்.பொலிஸார் கடந்த வெள்ளிக்கிழமை யாழ். நீதவான் நீதிமன்றில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு மீதான விசாரணை இன்றைய தினம் செவ்வாய்கிழமை யாழ்.நீதிவான் நீதிமன்றில் நீதிவான் சி. சதிஸ்தரன் முன்னிலையில்  விளக்கத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் , ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம். ஏ. சுமந்திரன் யாழ்.மாநகர சபை ஆணையாளர் சார்பில் மன்றில் முன்னிலையானார்.

அதன் பின்னர் குறித்த வழக்கு தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ,

அரசாங்கத்தின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் ஊடாக  யாழ். மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கடந்த வருடம் நிதி ஒதுங்கி இருந்தார். அந்த   திலீபனின் நினைவுதூபி அமைப்புக்காக ஒதுக்கியிருந்தார். அதன் பிரகாரம் சுற்றுவேலி அமைக்கப்பட்டுள்ளது.

மேலதிகமாக இவ்வருட நிதி ஒதுக்கீடாக நான் 2 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளேன். இதன் பிரகாரம் யாழ். மாநகர சபை தனது தீரமானங்களுக்கு ஏற்ப இதனை முன்னெடுக்கிறது. எங்களால் ஒதுக்கப்பட்ட இந்த நிதி ஒதுக்கீட்டிற்கு அரசாங்கம் ஒப்புதல் வழங்கியுள்ளது.  என தெரிவித்தேன்.

அத்துடன் பொலிசார் குறித்த கொட்டகைகள் , நினைவு தூபியை சூழ அமைக்கபட்டு உள்ள வேலி என்பன பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பதாக உள்ளதாகவும் தெரிவித்தனர்.

அதனையும் நாம் அடியோடு மறுத்தோம். நினைவு தூபி அமைந்துள்ள காணி மாநகர சபைக்கு சொந்தமானது எனவும் , அங்கு அமைக்கப்பட்டு உள்ள கொட்டகைகளோ வேலிகளோ எவருக்கும் இடையூறு இல்லை என தெரிவித்தேன்.

அத்துடன் நாளைய தினம் மேற்கொள்ளப்படவுள்ள நினைவேந்தல் நிகழ்வும் யாழ்.மாநகரசபையினால் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. ஆகவே இதனை தடுப்பதற்கான முன்னகர்வுகள் இல்லை என்பதை சுட்டிக்காட்டி உரிய ஆவணங்களை மன்றில் சமர்பித்தேன். என தெரிவித்தார்.

அதேவேளை தடை செய்யபட்ட பயங்கரவாத அமைப்பு உறுப்பினர் ஒருவரை நினைவு கூறுவதாக பொலிசார் புதிய குற்ற சாட்டு ஒன்றினை குற்றவியல் சட்டத்தின் பிரகாரம் முன் வைத்துள்ளனர்.

அது தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்ள குறித்த வழக்கினை எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்கு நீதிவான் ஒத்திவைத்தார்.

Leave a comment