முதல்வர் எடப்பாடி பழனிசாமி, காவல்துறை குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், காவல்துறை அதிகாரி ஒருவருக்கு சவால் விடுத்த அவர், முடிந்தால் காக்கிச்சட்டையை கழற்றிவிட்டு நேருக்கு நேர் மோதிப்பார்க்குமாறு சவால் விடுத்தார். ஜாதி ரீதியாகவும் பல்வேறு சர்ச்சை கருத்துக்களை கருணாஸ் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனை அடுத்து, முதல்வர் மற்றும் காவல்துறையை அவதூறாக பேசியதாக கருணாஸ் மீது நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்தர். யூ டியூப்பில் வெளியான வீடியோவை ஆதாரமாக கொண்டு 8 பிரிவுகளின் கீழ் கருணாஸ் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளது.
இந்நிலையில், கருணாசை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து போலீசார் இன்று அதிகாலை அதிரடியாக கைது செய்தனர்.
கைதாகி வேனில் ஏற்றும் முன்பு ஊடகங்களிடம் பேசிய கருணாஸ், ‘ சட்டமன்ற உறுப்பினரான என்னை கைது செய்ய சபாநாயகரின் அனுமதி வேண்டும். ஆனால், என்னை கைது செய்ய சபாநாயகரிடம் காவல்துறை அனுமதி பெற்றதா என தெரியவில்லை.
இளைஞர்கள் மத்தியில் எழுச்சியை உண்டாக்கும் வகையில் பேசிய என் மீது குற்றப்பிரிவு 307 கீழ் ஏன் வழக்கு பதிவு செய்தனர் ? என தெரியவில்லை. கருத்து சுதந்திரத்தை நசுக்கும் நோக்கில் ஆளும் ஆதிமுக அரசு செயல்படுகிறது.
இந்த வழக்கை சட்டப்பூர்வமாக நீதிமன்றத்தில் சந்திப்பேன்’ என அவர் தெரிவித்தார். இதன் பின்னர் விசாரணைக்காக கருணாசை போலீசார் அழைத்து சென்றனர்.