நைஜீரியாவை புரட்டிப் போட்ட கனமழை – தேசிய பேரிடராக அறிவிப்பு

2069 0

நைஜீரியாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாகாணங்களை தேசிய பேரிடர் பாதித்தவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

நைஜீரியாவில் தற்போது பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அங்கு ஓடும் முக்கிய ஆறுகளான நைஜர்- பெனு ஆகியவற்றின் கரையில் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டது.

இதனால் ஊருக்குள் வெள்ளநீர் புகுந்தது. தொடர்ந்து மழை பெய்வதால் அதிக அளவு வெளியேறிய தண்ணீர் குடியிருப்புகளுக்குள் புகுந்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் இருந்த 1 லட்சம் மக்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளம் மற்றும் வீடுகள், கட்டிடங்களின் இடிபாடுகளில் சிக்கியும் 100 பேர் பலியாகி உள்ளனர். ஏராளமானோர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மழை வெள்ளத்தால் நைஜீரியாவில் 10 மாகாணங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றில் சோகி, டெல்டா, அனம்பரா, மற்றும் நைஜர் ஆகிய 4 மாகாணங்கள் அதிக அளவில் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றன. எனவே, இந்த மாகாணங்கள் தேசிய பேரிடர் பாதித்தவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

சோகி, நைஜர் ஆகிய மாகாணங்கள் நைஜீரியாவின் மத்திய பகுதியில் உள்ளன. டெல்டாவும், அனம்பராவும் தெற்கே உள்ளன. சோகி மாகாணத்தின் தலைநகரான லோசோஜோவில் நைஜர், பெனு ஆகிய 2 ஆறுகளும் ஓடுகின்றன. இதனால் அங்கு கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்கு 36 அடி உயரத்துக்கு வெள்ளம் தேங்கி நிற்கிறது. இதேநிலை கடந்த 2012-ம் ஆண்டில் ஏற்பட்டது.

வெள்ள நிவாரண பணிக்காக ரூ.60 கோடியை அதிபர் முகமது புகாரி ஒதுக்கி உள்ளார். மீட்பு பணியில் ராணுவமும், போலீசாரும் மீட்பு படையினரும் ஈடுபட்டுள்ளனர்.

Leave a comment