அமெரிக்கா – அடுத்த ஆண்டு குடியேற அனுமதிக்கப்படும் அகதிகளின் எண்ணிக்கை மீண்டும் குறைப்பு

249 0

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு குடியேறவுள்ள அகதிகளின் எண்ணிக்கையை 30,000 மாக குறைக்க அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது. 

ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றமான சூழ்நிலையால் லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக மற்ற நாடுகளில் தஞ்சமடைந்து வருகிறார்கள். அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட அகதிகள் குடியேற்றப்பட்டு வருகிறார்கள்.
கடந்த ஆண்டு அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்ற டொனால்ட் டிரம்ப் அகதிகள் எண்ணிக்கையை குறைப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். முஸ்லிம் நாடுகள் உட்பட 8 நாடுகளை சேர்ந்த மக்கள் அமெரிக்காவில் குடியேற ஏற்கனவே தடை விதித்துள்ளார்.
இந்நிலையில், அடுத்த ஆண்டு அமெரிக்காவில் குடியேற்ற அனுமதிக்கப்படும் அகதிகளின் எண்ணிக்கை குறைக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி, கடந்த ஆண்டு அமெரிக்காவில் 45,000 அகதிகள் குடியேற்ற அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது. இது 2016-ம் ஆண்டு வந்த அகதிகளின் எண்ணிக்கையில் சரிபாதியாகும்.
அதேபோல், அடுத்த ஆண்டு (2019) அமெரிக்காவில் குடியேறவுள்ள அகதிகள் எண்ணிக்கை 45 ஆயிரத்தில் இருந்து 30 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 15 ஆயிரம் எண்ணிக்கை குறைவு ஆகும்.

Leave a comment