எல்சல்வடார் முன்னாள் அதிபருக்கு 10 ஆண்டு சிறை – சொத்து குவிப்பு வழக்கில் அதிரடி தீர்ப்பு

276 0

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த குற்றத்துக்கு எல்சல்வடார் முன்னாள் அதிபர் ஆன்டனியோ சாகாவிற்கு 10 ஆண்டு சிறை தண்டனை அளித்து கோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கியது. 

மத்திய அமெரிக்க நாடான எல்சல்வடார் நாட்டில் 2004-2009 ஆண்டுகளில் அதிபராக பதவி வகித்தவர், ஆன்டனியோ சாகா (வயது 53). இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாகவும், சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தை மீறி செயல்பட்டதாகவும் புகார் எழுந்தது.

இது தொடர்பாக அவர் மீது அங்கு உள்ள கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அவர் தனது மகன் திருமணத்தின்போது 2016 அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டார். வழக்கு விசாரணையின்போது, அவர் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவர் குற்றவாளி என கண்டு, வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த குற்றத்துக்கு 5 ஆண்டுகள், சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தை மீறிய குற்றத்துக்காக 5 ஆண்டுகள் என மொத்தம் 10 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து கோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கியது. மேலும் அந்த நாட்டு அரசுக்கு 260 மில்லியன் டாலர் தொகையை (சுமார் ரூ.1,872 கோடி) அவர் திருப்பிச் செலுத்த வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.

இந்த ஊழலில் சிக்கிய ஆன்டனியோ சாகா அரசு உயர் அதிகாரிகள் 6 பேருக்கு தலா 3 ஆண்டு முதல் 16 ஆண்டு வரையில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

Leave a comment