பிரான்சில் இரண்டாவது நாளாகத் தொடரும் ஈருருளிப் பயணம்!

226 0

தியாக தீபம் திலீபனின் 31 வது ஆண்டு நினைவேந்தலுடன் தமிழினஅழிப்புக்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய மாபெரும் பொங்கு தமிழ் பேரணியை முன்னிட்டும் அதற்கு வலுச்சேர்க்கும் வகையிலும் பிரான்சில் இருந்து மனித நேய செயற்பாட்டாளர்களின் ஈருருளிப்பயணம் இன்று (04.09.2018) செவ்வாய்க்கிழமை இரண்டாவது நாளாகத் தொடர்ந்து வருகின்றது.

காலை 9.00 மணிக்கு அகவணக்கத்துடன் ஆரம்பமாகிய ஈருருளிப்பயணம் Savigny le temple நகரமண்டபத்தை அடைந்து அங்கு பிரதான மாநாடு நடைபெறும் மண்டபத்தில் வைத்து நகரபிதாவிடம் கோரிக்கை அடங்கிய மனு கையளிக்கப்பட்டது. தொடர்ந்து நண்பகல் 12.00 மணிக்கு Moissy Cramayel நகர மண்டபத்தில் நகரபிதாவிடம் கோரிக்கை அடங்கிய மனு கையளிக்கப்பட்டது.

தொடர்ந்து ஈருருளிப்பயணம் அங்கிருந்து provins நகரத்தை 17.00 மணிக்கு அடைந்து கோரிக்கை அடங்கிய மனு நகர பிதாவின் செயலாளரிடம் கையளிக்கப்பட்டது. இன்றைய தினம் கரடுமுரடான பாதைகளில் மலைப்பகுதிகள் போன்ற ஏற்ற இறக்கம் உள்ள பகுதிகளில் மனிதநேய செயற்பாட்டாளர்கள் சென்றுள்ளனர். அவர்கள் செல்லும் இடங்களில் உள்ள மக்கள், தமிழ்ச்சங்கங்கள் அவர்களுக்கு ஆதரவுகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு)

Leave a comment