தண்ணீர் கோரி மண்டானை மக்கள் ஆர்ப்பாட்டம்

226 0

திருக்கோவில் பிரதேச சபைக்குட்பட்ட மண்டானை கிராமத்துக்கான நீர் விநியோகமானது கடந்த மூன்று நாட்களாக தடை செய்யப்பட்டுள்ளமையைக் கண்டித்து கிராம மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை இன்றைய தினம் மேற்கொண்டுள்ளனர்.

கடந்த 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்துக்கு பின்னர் உருவாக்கப்பட்ட இந்த மண்டானை கிராமத்தில் சுமார் 400 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இக் கிராமத்தில் அண்மைக்காலமாக கடும் வரட்சி நிலவி வருகின்ற நிலையில் கடந்த ஒரு மாத காலமாக இப் பகுதி மக்களுக்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் வழங்கப்படும் நீர் விநியோகமானது காலை ஒரு மணித்தியாலயத்திற்கே மட்டுப்படுத்தப்பட்டு வழங்கப்பட்டு வந்தது.

எனினும் கடந்த மூன்று நாட்களாக நீர் விநியோக நடவடிக்கையானது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதனால் அப் பகுதி மக்கள் பாவனைக்கு நீரின்றி பெரும் சிரமத்திற்கு முகங்கொடுத்து மேற்கண்ட ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பிரதேச மக்கள்,

வரட்சியினால் நாங்கள் நீரின்றி கடுமையாக பாதிப்படைந்துள்ளதாகவும் இந் நிலையில் நீர் வழங்கும் நடவடிக்கை முற்றாக தடை செய்யப்பட்டுள்ளமையானது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டும்.

எனவே நீர் வழங்கும் நடவடிக்கையை வழமைக்கு கொண்டு வர உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

Leave a comment