“தூயவை துணிந்தபின் பழி வந்து சேர்வதில்லை“- நிலக்சன்

455 0

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவனும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி நிலைய மாணவனும் சாரளம் சஞ்சிகையின் ஆசிரியரும் முன்னாள் தமிழ் மாணவர் ஒன்றியத் தலைவருமான ஊடகவியலாளர் சகதேவன் நிலக்சன் 01.08.2007 அதிகாலை 5 மணியளவில் கொக்குவிலில் உள்ள அவனது வீட்டில் பெற்றோரின் முன்னிலையில் வைத்து இனந்தெரியாத ஆயுததாரிகளால் படுகொலை செய்யப்பட்டான்.

நிலக்சன் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் (01.08.2018) 11 வருடங்களாகிவிட்டது. நிலக்சனின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கடந்த ஆண்டு நிலக்சனின் கல்லூரி நண்பர்களின் ஏற்பாட்டில் நிலக்சன் பயின்ற யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் நினைவுகூரப்பட்டது. அதன்போது நிலக்சன் நினைவாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறையில் முதலிடம் பெறும் மாணவருக்கான பட்டமளிப்பின் போதான தங்கப்பதக்கம் வருடந்தோறும் வழங்குவதற்கான நிகழ்வு அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.

அதற்கென நிலக்சனின் நண்பர்களிடம் பெறப்பட்ட வைப்பு நிதி ஆறு இலட்சம் ரூபா கடந்த 23.07.2018 அன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திடம் கையளிக்கப்பட்டது என்ற தகவலை பகிர்ந்துகொள்கின்றோம்.

எனினும் நிலக்சனின் கனவுகள் நனவாக்கப்படவில்லை. நிலக்சனும் நிலக்சன் போல சுட்டுக் கொல்லப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டும் போன ஊடகவியலாளர்களுக்கான நீதி விசாரணைப் பொறிமுறை ஒன்று நல்லாட்சி என்று கூறி ஆட்சிக்கு வந்த இந்த அரசினால் கூட உருவாக்கப்படவில்லை. கடந்த 2016 ஆம் ஆண்டு வடக்கு ஊடகவியலாளர்கள் சிறிலங்கா நாடாளுமன்றில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அப்போதைய ஊடக அமைச்சர் உள்ளிட்டவர்களைச் சந்தித்து படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான நீதி விசாரணைப் பொறிமுறை ஒன்றினை உருவாக்குமாறு கூட்டாக கோரிக்கை விடுத்தனர்.

எனினும் ஊடகவியலாளர்களது கோரிக்கைக் கடிதத்தை இறுகிய முகங்களோடு வாங்கிய நல்லாட்சியாளர்கள் இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையிலும் அடையாளத்திற்கேனும் ஒரு தமிழ் ஊடகவியலாளரது படுகொலை தொடர்பிலும் எந்தவொரு விசாரணையும் ஆரம்பிக்கவில்லை என்பதுதான் கசப்பான உண்மை. ஒரு ஊடகவியலாளரின் படுகொலைக்கான நீதிவிசாரணைக்கே முன்வராத அரசினைத்தான் எங்கள் அரசியல் தலைமைகள் பாதுகாத்துக்கொண்டிருக்கின்றன. அந்த அரசிடம்தான் இலட்சக்கணக்கில் கொல்லப்பட்ட மக்களுக்கான நீதியையும் காணாமல் ஆக்கப்பட்ட மக்களுக்கான நீதி விசாரைணையையும் எதிர்பார்த்திருக்கின்றன.

நிலா கொல்லப்பட்டு இன்றோடு பதினொரு வருடங்கள் ஓடிவிட்டது. ஆனால் இந்த விடையங்களில் தென்னிலங்கை ஊடக அமைப்புக்களும் சர்வதேச ஊடகம்சார் மற்றும் சாராத ஐ.நா அமைப்புக்களும் ஊடகவிலாளர்களின் மரணத்தின்போது கண்டன அறிக்கை. ஒரு ஆர்ப்பாட்ட ஊர்வலம். மலர்வளையம் வைத்தல் போன்ற சம்பிரதாயங்களோடு தங்கள் பணியை முடித்துவிடுகின்றன.

தங்கள் உயிர்களைத் துச்சமாக்கி மரணித்துப்போன ஊடகர்களின் குடும்பங்கள் என்ன செய்கிறன. அவர்களது எதிர்காலம் அவர்களிற்கான நீதி போன்ற விடையங்களில் மௌனித்துப்போனவர்களாகவே இருக்கின்றனர். நிலா ஆயுதம் ஏந்திய போராளிஅல்ல. அவன் பேனா தூக்கி எழுத்துக்களால் சாதிக்கத் துடித்த ஒரு பேனாப்போராளி. ஊடகத்துறையில் சாதிக்க களம்புகுந்து படுகொலை செய்யப்பட்வர்களில் அவனும் ஒருவன். இலங்கையின் கறைபடிந்த ஊடக ஐனநாயகத்தில் பக்கங்களில் நிலாவின் மணமும் ஒரு சகாப்தம்.

தூயவை துணிந்தபின் பழி வந்து சேர்வதில்லை
ச. நிலக்ஸன் கூறிய வாசகம்
நிலாவின் நண்பர்கள்

Leave a comment