கருத்து வேறுபாடுகளை களைந்து ஒற்றுமையாக செயற்பட வேண்டும்!

309 0

நாட்டின் தற்போதைய நிலையை கருத்திற்கொண்டு, கருத்து வேறுபாடுகளை களைந்து ஒற்றுமையாக செயற்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அதனை விடுத்து பிரிந்து செயற்படுவோமாக இருந்தால் எமது மக்களை நாமே அழிப்பதாக அமையுமென அவர் மேலும் குறிப்பிட்டார்.

வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எழுதிய நீதியரசர் பேசுகிறார் என்ற தலைப்பிலான புத்தகம் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டு வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்குறித்தவாறு குறிப்பிட்டார்.

விடுதலைப் புலிகளை அழிக்க சர்வதேசம் உதவியதாகவும், அதற்காக தமிழ் மக்களுக்கு தீர்வுத் திட்டத்தை தருவோமென சர்வதேசத்திற்கு இலங்கை அரசாங்கம் வாக்குறுதி வழங்கியதாகவும் இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார். எனினும், தீர்வுத் திட்டத்தில் இலங்கை அரசாங்கம் தற்போது பின்னிற்கின்றதென குற்றஞ்சாட்டினார்.

மேலும், விடுதலைப் புலிகளின் காலத்தில்கூட தமிழ் மக்களுக்கான தீர்வுத் திட்டம் தொடர்பாக இலங்கை அரசாங்கம் பல முன்மொழிவுகளை முன்வைத்ததாகவும், அவற்றில் எதுவும் செயற்படுத்தப்படவில்லையென்றும் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில், தமிழ் மக்களுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் தார்மீக பொறுப்பு சர்வதேசத்திற்கு உண்டு என்றும் அதனை சர்வதேசம் உணர்ந்துகொள்ள வேண்டுமெனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் குறிப்பிட்டார். இதனை செயற்படுத்தாதவிடத்து, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட சர்வதேச சாசனத்தை உதாசீனப்படுத்துவதாகவே அமையும் என்றும் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை நாட்டை யார் ஆளவேண்டும் என்பதை தீர்மானிக்கும் வல்லமை தமிழ் மக்களுக்கு உண்டு என்பதை கடந்த 2015ஆம் ஆண்டு தேர்தல் நிரூபித்து விட்டதென சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் மக்கள் தங்களுக்கான தீர்வை அடையவேண்டுமாயின் ஒருமித்து செயற்படுவது அவசியமென வலியுறுத்தினார்.

Leave a comment