ஆப்பிரிக்க கண்டம் இரண்டாக பிளவுப்பட்டு வருகிறது – விஞ்ஞானிகள் தகவல்

5711 0

கென்யாவில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய நிலப்பிளவு காரணமாக, ஆப்பிரிக்க கண்டம் இரண்டாக பிளவுபட வாய்ப்பு இருப்பதாக புவியியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். 

கென்யாவில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய நிலப்பிளவு காரணமாக, பல மில்லியன் ஆண்டுகளுக்கு பிறகு ஆப்பிரிக்க கண்டம் இரண்டாக பிளவுபட வாய்ப்பு இருப்பதாக புவியியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் ஆப்பிரிக்க கண்டத்தில், மிகப்பெரிய நிலப்பிளவு ஏற்பட்டது. இந்த பிளவின் காரணமாக கென்யாவில் உள்ள நைரோபி – நரோக் நெடுஞ்சாலை முழுவதும் சேதமடைந்ததோடு, அப்பகுதியில் நில அதிர்வுகளும் ஏற்பட்டது.

வடக்கே ஏடன் வளைகூடா தொடங்கி தெற்கே ஜிம்பாப்வே வரை சுமார் 3000 கிலோமீட்டர் தொலைவுக்கு இந்த பிளவு ஏற்பட்டுள்ளது. இந்த பிளவு ஆப்பிரிக்க கண்டத்தை சமமற்ற இரு தட்டுகளாக பிரித்துள்ளது. அவை சோமாலி மற்றும் நியூபியன் என கூறப்படுகின்றன. இந்த பிளவு அதிகரித்துக் கொண்டே போகும் பட்சத்தில் ஆப்பிரிக்க கண்டம் இரண்டாக பிளவுபட வாய்ப்பு இருப்பதாக புவியியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆப்பிரிக்க கண்டத்தின் அடிப்பகுதியில் உள்ள டெக்டானிக் எனப்படும் தட்டுக்கள் வேகமாக அரிக்கப்பட்டு வருகிறது. மேலும் பூமியின் மேற்புறம் அதிக நீரோட்டம் இருக்கிறது. இதனால் ஆப்பிரிக்க கண்டம் இரண்டாக பிளவுபட அதிக வாய்ப்பு இருப்பதாக புவியியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தப் பிளவின் காரணமாக எத்தியோப்பியா, ருவாண்டா, தான்ஸானியா, ஜாம்பியா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நாடுகள் தனிக் கண்டமாக பிரிய வாய்ப்பு இருப்பதாக கூறிய விஞ்ஞானிகள், இத்தகைய மாற்றங்கள் ஏற்பட இன்னும் பல மில்லியன் ஆண்டுகள் ஆகும் எனவும் தெரிவித்தனர்.

Leave a comment