ராமர் ரத யாத்திரையை தடுத்து நிறுத்த வேண்டும்- அ.தி.மு.க. கூட்டணி எம்.எல்.ஏ.க்கள்

263 0

விசுவ இந்து பரி‌ஷத் நடத்தும் ராமர் ரத யாத்திரையை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அ.தி.மு.க. கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தியுள்ளனர்.

அ.தி.மு.க. கூட்டணி எம்.எல். ஏ.க்கள் கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ், மனித நேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அமைதிப் பூங்காவாக திகழும் தமிழகத்தில் மத அடிப்படை வாதிகளின் கொடூர கரங்கள் நுழைவதை தமிழ் சமுதாயம் அனுமதிக்காத நிலையில், விஸ்வஇந்து பரி‌ஷத் என்ற அமைப்பு ‘ராமராஜ்ஜிய ரத யாத்திரை’ என்ற பெயரில் தமிழகத்தில் பதட்டத்தை தூண்டி விட முயல்கிறது.

எதிர்வரும் மார்ச் 20 அன்று, நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகில் புளியறையில் நுழையவிருக்கும் இந்த யாத்திரையால், அண்ணன்-தம்பிகளாய் வாழும் தமிழ் சமுதாயத்தில் தேவையற்ற சமூக பதட்டம் உருவாகும் அபாயமிருக்கிறது.

கடந்த காலத்தில் இது போன்ற ரதயாத்திரைகளால் வட இந்தியாவில் கலவரங்கள் நடைபெற்றதை நாட்டு மக்கள் மறக்கவில்லை.

இந்நிலையில் அமைதி, நல்லிணக்கம், சகோதரத்துவம் என பூத்துக்குலுங்கும் தமிழ் நிலத்தில், மதவெறியின் நச்சுப்பாம்புகள் நடமாட அனுமதிக்க கூடாது என்பதே பெரும்பான்மையான தமிழர்களின் எண்ண ஓட்டமாக இருக்கிறது.

எனவே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ‘சமூகநீதி காத்த வீராங்கணை’ ஜெயலலிதா அம்மாவின் அரசுக்கு களங்கம் ஏற்படாத வகையில், இந்த ரதயாத்திரையை தமிழக எல்லையிலேயே தடுத்து நிறுத்தி, தமிழ்நாட்டின் அமைதியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்

Leave a comment