பிப்ரவரி இறுதிக்குள் எடப்பாடி அரசு கவிழும்: செந்தில் பாலாஜி

226 0

பிப்ரவரி மாத இறுதிக்குள் எடப்பாடி அரசு கவிழும் என முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

ஊட்டியில் டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:-

அரசு போக்குவரத்து கழகம் சேவைத்துறையாக மட்டுமே செயல்பட வேண்டும் என ஜெயலலிதா கூறுவார். ஆனால் கூவத்தூர் பழனிசாமி அரசு மக்கள் மீது அக்கறை இல்லாத அரசாகவும், நிர்வாகத் திறமை இல்லாத அரசாகவும் உள்ளது.

பொதுமக்கள் ஏற்றுக் கொள்ள முடியாத அளவுக்கு கட்டணங்களை உயர்த்தி உள்ளனர்.

இதனால் மாணவ-மாணவிகள் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் சாலையில் இறங்கி போராடும் நிலைக்கு வந்துள்ளனர்.

தற்போது குறைக்கப்பட்டுள்ள கட்டண குறைப்பு கண் துடைப்பு நாடகம். இதனால் மக்களுக்கு எந்தவித பயனும் இல்லை.

உடனடியாக பஸ் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். போக்குவரத்து கழகமும் கடன் சுமையால் மூழ்கும் அபாயத்திற்கு சென்றுள்ளது.

100 மடங்கு கட்டணத்தை உயர்த்தியும் கூட ஒரு நாளுக்கு ரூ. 4 கோடி நஷ்டத்தில இயங்குவதாக முதல்-அமைச்சர் தெரிவித்துள்ளார்.இதற்கு காரணம் திறமை இல்லாததே. போக்குவரத்து கழகம் சேவை துறையாக இருக்க வேண்டும்.

வருகிற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தினகரன் ஆதரவாளர்கள் வெற்றி பெறுவார்கள். பஸ் கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்து நாளை(31-ந் தேதி) அனைத்து மாவட்டங்களிலும் எங்கள் ஆதரவாளர்கள் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும்.

நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டு நாங்கள் மீண்டும் சட்டமன்றத்திற்கு செல்வோம்.சட்ட மன்றத்திற்கு செல்லும் போது சம்பள உயர்வு வேண்டாம் என கூறி விடுவோம்.பிப்ரவரி மாத இறுதிக்குள் எடப்பாடி பழனிசாமி அரசு கவிழும். மத்திய அரசுக்கும், பாரதிய ஜனதாவுக்கும் ஆதரவு தெரிவிக்க மாட்டோம்.ஒரு போதும் எடப்பாடி மற்றும் ஓ.பி.எஸ்.சுடன் இணைய மாட்டோம்.

அதே சமயம் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் சிறந்த ஆட்சியை தர வேண்டும் என நினைத்தால் தினகரன் தலைமையில் ஆட்சி அமைக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் கோவை வடவள்ளியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட செந்தில் பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது-

ஜெயலலிதா அரசாக இருந்தால் பஸ் கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற்று இருப்பார். போக்குவரத்தில் ஏற்படும் நிதி பற்றாக்குறையை அரசு தான் வழங்க வேண்டும்.

சேலத்தில் இருந்து கோவைக்கு சுமார் ஆயிரம் பஸ் முக்கிய வழி தடங்களை தமிழக அமைச்சர்கள் வாங்கிய பிறகுதான் பஸ் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டது உண்மை தான்.இது குறித்து எங்களிடமே பல தனியார் பஸ் உரிமையாளர்கள் கூறி உள்ளனர்.

அ.தி.மு.க.வில் இருந்து நிர்வாகிகளை நீக்குவது சட்டப்படி குற்றம் ஆகும். மத்திய அரசிடம் தற்போதைய தமிழக அரசு நிர்வாகத்தை அடமானம் வைத்துள்ளது.மத்திய அரசின் அதிகாரத்தை பயன்படுத்தி குறுக்கு வழியில் பெற்ற சின்னத்தையும், கட்சியையும் நீதிமன்றம் மூலம் மீண்டும் பெறுவோம்.

அ.தி.மு.க.வின் நிரந்தர பொது செயலாளர் சசிகலா, துணை பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் தான்.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment