ஜெருசலேம் விவகாரத்தில் அமெரிக்காவின் முடிவை ஏற்கமுடியாது – ஐ.நா பாதுகாப்பு கவுன்சில்

489 0

இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரித்து அமெரிக்கா எடுத்துள்ள முடிவை ஏற்கமுடியாது என்று கூறியுள்ள ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் அம்முடிவை நிராகரிப்பதாக அறிவித்துள்ளது.

இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரித்துள்ள அமெரிக்கா உலக அளவிலான எதிர்ப்பை சம்பாதித்துள்ளது. ஒட்டு மொத்த அரபு நாடுகள் மட்டுமல்லாது ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகளும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளன. இது தொடர்பாக விவாதிப்பதற்காக ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டம் வெள்ளி கிழமை நடைபெற்றது.

15 நாடுகள் உறுப்பினர்களாக உள்ள இந்த கவுன்சிலில் அமெரிக்காவின் முடிவுக்கு எதிராக 14 நாடுகள் வாக்களித்தன. ஜெருசலேம் தொடர்பான தீர்மானங்கள் இதற்கு முன்னர் பாதுகாப்பு கவுன்சிலில் நிறைவேறியுள்ள நிலையில், அமெரிக்காவின் அறிவிப்பு அதற்கு விரோதமாக உள்ளதாக அந்த நாடுகள் விமர்சித்தன.

“கிழக்கு ஜெருசலேமானது பாலஸ்தீனின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி, ஒருங்கிணைந்த ஜெருசலேம் நகரம் இஸ்ரேல் – பாலஸ்தீனின் கூட்டுத் தலைநகராக இருக்க வேண்டும்’ என்பதே எங்கள் நிலைப்பாடு என்று ஐ.நா.வுக்கான பிரிட்டன் தூதர் மாத்யூ ரைக்ராப்ட் கூறினார்.

ஜெருசலேமில் இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதரகத்தை அமைக்கவும் அந்த நகரை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்கவும் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவானது பல கவலைகளையும் கேள்விகளையும் எழுப்பும் என்று தெரிந்துதான் மிகுந்த யோசனைக்குப் பிறகு இந்த முடிவை அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார் என அந்நாட்டு தூதர் நிக்கி ஹேலி கூறினார்.

மேலும் அவர் பேசியதாவது:-

அந்தப் பிராந்தியத்தில் அமைதி நிலவ இந்த அறிவிப்பு உதவும். அனைத்துத் தரப்பினரும் ஒருவருக்கொருவர் நேர்மையுடன் நடந்து கொண்டால்தான் அமைதிக்கான முயற்சிகளில் முன்னேற்றமும் வெற்றியும் காண முடியும். தற்போதைய உண்மை நிலவரத்தின் அடிப்படையில் அமெரிக்காவின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. எது ஏற்கெனவே வெளிப்படையாக உள்ளதோ, அதனை அமெரிக்கா அங்கீகரித்திருக்கிறது.

ஜெருசலேம் இஸ்ரேலின் தலைநகர். டெல் அவிவ் நகரில் உள்ள இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதரகத்தை ஜெருசலேமில் அமைக்குமாறு வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு அதிபர் உத்தரவிட்டுள்ளார். இதை மட்டும்தான் அதிபர் செய்துள்ளார். ஜெருசலேம் நகர்ப்புற எல்லை வரையறைகள், எந்தப் பகுதியில் யார் யாருக்கு உரிமை உண்டு போன்ற விவகாரம் எதையும் அதிபர் அறிவிப்பு தொடவேயில்லை. அது இரு தரப்பு பேச்சுவார்த்தை மூலம் தீர்மானிக்கப்பட வேண்டியது என்று அமெரிக்கா இப்போதும் கூறுகிறது.

ஜெருசலேம் எல்லைக்கோடுகள் குறித்து அதிபர் எதுவும் கூறவில்லை. அப்பகுதியில் இரு தரப்பினரும் கோரும் இறையாண்மை குறித்து அதிபர் கருத்து வெளியிடவில்லை. அதையெல்லாம் இஸ்ரேலியரும் பாலஸ்தீனரும் பேசித் தீர்வு காண வேண்டும் என்பது அமெரிக்காவின் நிலைப்பாடு.

தற்போது மலைக்கோயில், அல்-அக்ஸா மசூதியில் நடைபெற்று வரும் நிர்வாகம், வழிபாடு ஏற்பாடுகளில் எந்த மாற்றத்தையும் அதிபர் டிரம்ப்பின் அறிவிப்பு கொண்டு வரவில்லை. அங்கு தற்போதுள்ள ஏற்பாடே தொடர வேண்டும் என்றுதான் கூறியிருக்கிறார்.

இவ்வாறு நிக்கி ஹேலி தெரிவித்தார்.

“அமெரிக்காவின் அறிவிப்பு ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களின் அடிப்படையில் இல்லை, அந்தப் பிராந்தியத்தில் அமைதி ஏற்பட இந்த அறிவிப்பு உதவாது, இஸ்ரேல் – பாலஸ்தீன் இடையேயான பேச்சுவார்த்தை மூலமே இதற்குத் தீர்வு காண முடியும்’ என்று அமெரிக்காவின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, ஸ்வீடன் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் முடிவு சர்வதேச சட்டங்களுக்கு விரோதமானது என்று ஐ.நா.வுக்கான பாலஸ்தீன் பார்வையாளர் ரியாத் மன்சூர் கூறினார்.

இதற்கிடையே பேசிய இஸ்ரேல் தூதர் டேனி டேனன், “அமெரிக்காவின் துணிச்சலான முடிவுக்கு இஸ்ரேல் நன்றி தெரிவிக்கிறது. அதிபர் டொனால்ட் டிரம்ப், துணை அதிபர் மைக் பென்ஸ், ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹேலி ஆகியோருக்கு நன்றி. ஜெருசலேமில் உள்ள மலைக்கோயிலில் அகழாய்வில் கிடைத்த கி.பி. 67-ம் ஆண்டைச் சேர்ந்த நாணையத்தில் “புனித ஜெருசலேம்’ என்று பொறித்துள்ளது. கி.பி. 70-ல் ஜெருசலேமில் யூதக் கோயில் அழிக்கப்பட்டது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு யூதர்கள் தங்கள் தாயகத்தைவிட்டுத் துரத்தப்பட்டனர்” என்று அவர் கூறினார்.

Leave a comment