அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் மன்னார் மாவட்டத்தில் மாவீரர் தின ஏற்பாடுகள்

21325 0

புலனாய்வாளர்களின் பல்வேறு அச்சுரூத்தல்களுக்கு மத்தியிலும் மன்னார் மாவட்டத்தில் மாவீரர் தினம் அனுஷ்ட்டிப்பதற்கான சகல விதமான ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளதாக மன்னார் மாவட்ட நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்டத்தில் ஆட்காட்டி வெளி மற்றும் பெரிய பண்டிவிருச்சான் ஆகிய இரண்டு மாவீரர் துயிலும் இல்லங்களிலும் மாவீரர் தினம் அனுஷ்ட்டிப்பு தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் ஊடக சந்திப்பு இன்று  காலை மன்னார் மாவட்ட நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு அலுவலகத்தில் இடம் பெற்றது.

இதன் போது கருத்து தெரிவிக்கையிலேயே மன்னார் மாவட்ட நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“வடக்கு,கிழக்கில் இருக்கின்ற அனைத்து மாவீரர் துயிலும் இல்லங்களிலும் மாவீரர் தினம் அனுஷ்ட்டிப்பதற்கான ஏற்பாட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. என்றும் இல்லாதது போல் மன்னார் மாவட்டத்தில் தான் பல்வேறு பிரச்சினைகள் முன் வைக்கப்படுகின்றன.

அரசியல் வாதிகளின் பின் புலத்தோடு இடம் பெறுகின்ற நிகழ்வுகளுக்கு அரசாங்கமும், அரசாங்கத்தின் புலனாய்வாளர்களும் எந்த விதமான தடைகளையும் விதிப்பதாக இல்லை. அதை கண்டு கொள்ளாதது போல் இருக்கின்றார்கள்.

மாவட்டத்தில் உள்ள பொது அமைப்புக்கள் ஒன்றினைந்து மாவட்டத்தில் எந்த வித அரசியல் கலப்பும் இன்றி தூய நோக்குடன் முன்னெடுக்கின்ற மன்னார் மாவட்டத்தின் முயற்சிக்கு பல்வேறு விதமான தடைகளை புலனாய்வாளர்கள் எங்களுடைய நிர்வாகத்தினருக்கு தொலைபேசியூடாகவும், நேரடியாகவும்  இன்று வரை அச்சுருத்துகின்ற சம்பவங்கள் இடம் பெற்று வருகின்றது.

அரசு ஆட்சி மாற்றத்தின் பின்னர் கொள்கை ரீதியான அடிப்படையில் இவ்வாறான நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்துவதற்கு அனுமதியளித்துள்ள இவ்வாறான சூழ்நிலையில் ஏன் மன்னாரில் மட்டும் அரசியல் வாதிகள் அல்லாத ஒரு நிகழ்வை குழப்ப வேண்டும் என்கின்ற போக்கு காணப்படுகின்றது.

ஏனைய மாவீரர் துயிலும் இல்லங்களில் அரசினால், அரசின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் அடிப்படையில் துயிலும் இல்லங்களின் கட்டுமானப்பனிகள் நடைபெறுகின்ற போது இங்கு சாதாரண முறையில் உள்ளூர் வாசிகளின் ஏற்பாட்டுடன் நடை பெறுகின்ற நிகழ்வுகளுக்கு அரசாங்கம் தடை விதிக்க முற்படுவதும், புலனாய்வாளர்களை கொண்டு மிரட்டுவதும் என்றால் அரசின் ஒத்தோடிகளுக்கு ஒரு ஞாயமும், அரசு சாரமல் இருக்கின்ற சிவில் அமைப்புகளுக்கு இன்னும் ஒரு ஞாயமா? என்கின்ற கேல்வி எழுகின்றது.

எனவே அரசாங்கம் தங்களுடன் சேர்ந்து இருப்பவர்களை மட்டும் தான் இவ்வாறான நிகழ்வுகளை செய்வதற்கு அனுமதிக்கப்போகின்றதா? என்கின்ற நிலைப்பாடு இருக்கின்றது.

இவ்வாறான செயற்பாடுகளின் மூலம்  புலனாய்வாளர்கள் திட்டமிட்டு செயற்படுவதாகவே நாங்கள் கருதுகின்றோம். ஏற்பாடுகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளது. நிகழ்வு திட்டமிட்ட படி திட்டமிட்ட நேரத்திற்கு இடம் பெறும்.”  என  தெரிவித்தார்.

Leave a comment