தீவிரவாதி ஹபீஸ் சயீத் வீட்டுக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார்

445 0

மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட தீவிரவாதி ஹபீஸ் சயீத் வீட்டுக்காவலில் இருந்து பத்து மாதத்திற்கு பின் இன்று விடுவிக்கப்பட்டார்.

பாகிஸ்தானை சேர்ந்த 10 தீவிரவாதிகள் கடல் மார்க்கமாக இந்தியாவுக்குள் நுழைந்து மும்பையில் கடந்த 26-11-2008 அன்று குண்டுகளை வெடித்தும், துப்பாக்கியால் சுட்டும் கொடூர தாக்குதல்கள் நடத்தினர். 150-க்கும் மேற்பட்டோர் கொன்று குவிக்கப்பட்ட இந்த தாக்குதல்களை பாகிஸ்தானில் அமர்ந்து கொண்டு, மூளையாக இருந்து செயல்படுத்தியவர், ஹபீஸ் சயீத்.

லஷ்கர் இ தொய்பா என்ற தீவிரவாத இயக்கத்தின் நிறுவனரான இவர், அந்த இயக்கத்துக்கு பாகிஸ்தானில் தடை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது ஜமாத் உத்தவா என்ற பெயரில் அரசியல் இயக்கத்தை நடத்தி வருகிறார். அவரது தலைக்கு அமெரிக்கா 10 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசுத்தொகை அறிவித்துள்ளது.

ஹபீஸ் சயீத்தும், அவரது கூட்டாளிகள் 4 பேரும் பாகிஸ்தான் அரசால் கடந்த ஜனவரி 31-ம் தேதியில் இருந்து வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். அவரும், அவரது இயக்கத்தினர் 37 பேரும் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டோரின் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். இதனையடுத்து, ஹபீஸ் சயீத்தின் பெயர் தீவிரவாத தடுப்பு சட்ட பட்டியலின் 4-வது அட்டவணையில் சேர்க்கப்பட்டது.

இதற்கு எதிராக லாகூர் உயர்நீதி மன்றத்தில் ஹபீஸ் சயீத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கடந்த மாதம் 14-ம் தேதி விசாரணைக்கு வந்த போது, ஹபீஸ் சயீதுக்கான வீட்டுக்காவலை நீட்டிக்க விரும்பவில்லை எனவும், அந்த உத்தரவை திரும்ப பெறுவதாகவும் நீதிமன்றத்தில் பாகிஸ்தான் அரசு தெரிவித்தது.

22-ம் தேதி நடந்த இந்த வழக்கின் விசாரணையில், வீட்டுக்காவலை மேலும் மூன்று மாதங்கள் நீட்டிக்க வேண்டும் என அரசுத்தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால், அந்த கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள் ஹபீஸ் சயீத் மீதான வீட்டுக்காவலை நீட்டிக்க மறுத்து விட்டது. மேலும் ஹபீஸ் சயீதை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நேற்றுடன் அவரது வீட்டிக்காவல் முடிவடைந்தது. இதையடுத்து அவர் வீட்டுக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவரது வீட்டிலிருந்த பாதுகாவலர்களும் விலக்கி கொள்ளப்பட்டனர். இந்த தகவலை ஜமாத் உத்தவா அமைப்பின் செய்தி தொடர்பாளர் அஹமத் நதிம் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், எங்கள் தலைவரை சுதந்திரமாக பார்ப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம். ஜெயில் அதிகாரிகள் அவரை விடுவிப்பதற்கான உத்தரவை அனுப்பி வைத்தனர். விடுவிக்கப்பட்ட பின் அவரை பார்ப்பதற்காக அவரது வீட்டின் முன் கூடிய ஆதரவாளர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார், என கூறினார்.

Leave a comment