இஷாரா செவ்வந்தியுடன் கைதுசெய்யப்பட்ட தக்ஷி உட்பட இருவருக்கு விளக்கமறியல்!

19 0

நேபாளத்தில் இஷாரா செவ்வந்தியுடன் கைதுசெய்யப்பட்டு 90 நாட்கள் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த  நந்தகுமார தக்ஷி என்ற பெண் உட்பட இருவரை எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ் போதரகம இன்று புதன்கிழிமை (7) உத்தரவிட்டுள்ளார்.

கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் 2025ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாக இருந்த நிலையில், இலங்கை பொலிஸார் மற்றும் சர்வதேச பொலிஸார் இணைந்து மூன்று நாட்களாக நேபாளத்தில் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது கடந்த ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டார்.

இஷாரா செவ்வந்தியுடன் நந்த குமார தக்ஷி என்ற பெண் மற்றும் ஜேகே பாய் உட்பட மேலும் ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட ஐவரும் ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி இரவுக்குள் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டதையடுத்து 90 நாட்கள் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டனர்.

பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த  நந்தகுமார தக்ஷி என்ற பெண் உட்பட இருவர் இன்று நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.