தேர்தல் ஆணையத்தை கண்டித்து தவெக சார்பில் வரும் 16-ம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில், அக்கட்சியின் தலைவரான நடிகர் விஜய் கலந்து கொள்ள உள்ளார்.
தமிழகம், மேற்குவங்கம், கேரளா உள்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப்பணி நவம்பர் 4 முதல் ஒரு மாதம் நடத்தப்படும் என அண்மையில் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து, அதற்கான பணியும் முடுக்கி விடப்பட்டது. இதற்கு திமுக, காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் உள்பட மேலும் சில கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதோடு மட்டும் அல்லாமல் அண்மையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தலைமையில் நடைபெற்ற அரசியல் கட்சிகளின் கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது என முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, கடந்த 3-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்தது. இதேபோல், மேலும் சில மாநில கட்சிகள் சார்பிலும் வழக்கு தொடரப்பட்டது. இதுஒருபுறம் இருக்க அதிமுக சார்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என அக்கட்சி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிக்கு பாஜக, அதிமுக உள்பட மேலும் சில கட்சிகள் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகிறது.
தவெக இந்த விவகாரத்தில் மவுனம் காத்து வந்தது. இந்நிலையில், அந்த கட்சியும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் வரும் 16-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளது. இந்த முடிவை விஜய் எடுத்துள்ளதாக அக்கட்சியினர் தெரிவித்தனர். இதையடுத்து, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. சென்னையை பொருத்தவரை ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற உள்ளது. இதற்கு போலீஸாரிடம் அனுமதியும் கேட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில் நடிகர் விஜய் ஏதாவது ஒரு மாவட்டத்தில் கலந்து கொள்ள முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

