நிதியை முறைகேடாக பயன்படுத்திய தரப்பினருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்!- சமந்த வித்யாரத்ன

23 0

பெருந்தோட்டத்துறை  அபிவிருத்திக்காக கடந்த காலங்களில் உலக வங்கியால் வழங்கப்பட்ட நிதியை முன்னாள் அமைச்சர்களான தயா கமகே, ரொஷான் ரணசிங்க உட்பட அரசியல்வாதிகளின் உறவினர்கள் பகிர்ந்துக் கொண்டுள்ளார்கள். இந்த கருத்திட்ட நிதி முறைகேடாக பயன்படுத்தியுள்ளதால் குறித்த நிதியை மீள ஒப்படைக்க வேண்டும் என்று  உலக வங்கி அறிவித்துள்ளது. நிதியை முறைகேடாக பயன்படுத்திய தரப்பினருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என  பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  புதன்கிழமை (12)  நடைபெற்ற  2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான   நான்காம்  நாள் விவாதத்தில் உரையாற்றுகையில்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

பெருந்தோட்ட மக்களுக்கான 200 ரூபா சம்பள அதிகரிப்பை  சட்டத்தின் ஊடாக சிக்கலுக்குட்படுத்த எதிர்தரப்பினர் முயற்சிக்கிறார்கள்.

நாட்டின் பொருளாதாரத்துக்கு கடந்த 200 ஆண்டுகாலமாக பங்களிப்பு செய்த பெருந்தோட்ட மக்கள் இன்றும் உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் தான் வாழ்கிறார்கள்.

பெருந்தோட்ட மக்களின் அபிவிருத்திக்கு எடுக்கும் தீர்மானங்களுக்கு அரசியல் கட்சி பேதமின்றி அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

200 ரூபாய் சம்பள அதிகரிப்பு ஒன்றும் பெரியதொரு தொகையல்ல, இந்த தொகை வழங்குவதையும்  நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் செயற்படுவது முறையற்றது.

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கங்களில் அரச நிதி முறையாக பயன்படுத்தப்பட்டதா என்பது இன்றளவிலும் பிரச்சினைக்குரியதாக காணப்படுகிறது.

கடந்த அரசாங்கங்களின் போது பெருந்தோட்ட அபிவிருத்தி அமைச்சுக்கு உலக வங்கி  ASMP  என்ற கருத்திட்டதை அறிமுகப்படுத்தி நிதி ஒதுக்கியிருந்தது.

இந்த நிதி ஊடாக பெருந்தோட்ட தொழிற்றுறையை மேம்படுத்தவும்,  அந்த தொழிற்றுறையில் ஈடுபடுபவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

உலக வங்கியால் கிடைக்கப் பெற்ற நிதியில் 149.5 இலட்சம் ரூபாய்  முன்னாள் அமைச்சர் தயா கமேகவின் மனைவிக்கும்,  180 இலட்சம் ரூபாய் முன்னாள் அமைச்சர்   ரொஷான் ரணசிங்கவின் மனைவிக்கும், 85 இலட்சம் ரூபாய் தயா கமகேவின் செயலாளருக்கும்,

375 இலட்சம் ரூபாய் முன்னாள் அமைச்சர் லக்ஷமன் செனவிரத்னவின் மகனுக்கும்,முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவின்  சகோதரருக்கு 481 .இலட்சம் ரூபாய் என்ற அடிப்படையில் நிதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் குறித்த அபிவிருத்தி செயற்திட்டம் முழுமைப்படுத்தப்படவில்லை.

இந்த செயற்திட்டம் மற்றும் அதற்காக ஒதுக்கப்பட்ட நிதி  தொடர்பின் கள ஆய்வினை மேற்கொண்ட உலக வங்கி குறித்த நிதியை மீள ஒப்படைக்குமாறு குறிப்பிட்டது.

இந்த விடயம்  தொடர்பில் உலக வங்கியிடம் பேச்சுவார்த்தையை மேற்கொண்டு  நிதியை செலுத்துவதற்கு  காலவகாசம் கோரியிருந்தோம்.இருப்பினும்  உலக வங்கி அதற்கு அனுமதி வழங்கவில்லை.

வழங்கப்பட்ட நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே நிதியை மீள செலுத்துங்கள் அல்லது  இலங்கைக்கான சகல நிதியுதவிகளும் நிறுத்தப்படும் என்று உலக வங்கி அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து 5 இலட்சத்து 8863   டொலரை செலுத்துவதற்கு நிதியமைச்சு  தீர்மானித்துள்ளது.  இவர்களின் ஆட்சியில் இடம்பெற்ற ஊழல் மோசடிக்கும் நாங்கள் சர்வதேச மட்டத்தில் பொறுப்புக்கூற வேண்டியது.

பெருந்தோட்ட அமைச்சுக்கு உலக வங்கியால் கிடைத்த நிதியை முறைகேடாக  பயன்படுத்தியவர்கள் இன்று பெருந்தோட்ட மக்களுக்கு  வழங்கவுள்ள 200 ரூபா சம்பள அதிகரிப்பை கேள்விக்குள்ளாக்குகிறார்கள்.

உலக வங்கியால் கிடைக்கப்பெற்ற நிதியை மோசடி செய்தவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.