மத்திய வங்கியால் பதிவு செய்யப்பட்ட நிதி நிறுவனங்களை முறையாக கண்காணிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்

42 0

நுண்கடன் கண்காணித்தல் அதிகார சபை தொடர்பான சட்டவரைவு தயாரிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நாட்களில் அந்த வரைவு பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும். அதற்கமைய மத்திய வங்கியால் பதிவு செய்யப்பட்ட நிதி நிறுவனங்களை  முறையாக  கண்காணிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்  என  நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் பெர்னாண்டோ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  செவ்வாய்க்கிழமை (11) நடைபெற்ற அமர்வின்  போது  வாய்மூல விடைக்கான வினாக்கள்  வேளையின் போது  இலங்கைத் தமிழரசுக் கட்சியின்  பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு  அவர்  மேலும் உரையாற்றியதாவது,

வடக்கு மாகாணத்தில்  28 அரச வங்கிகளும், 38 தனியார் வங்கிகளும், 78 நிதி நிறுவனங்களும், 13  அனுமதிப்பெற்ற நுண்கடன் நிதி நிறுவனங்களும் உள்ளன. அரச மற்றும் தனியார் வங்கிகள் கடன் வழங்கும் போது  அறவிடப்படும் வட்டி வீதங்கள் இலங்கை மத்திய வங்கியின்  தீர்மானத்துக்கு அமைய செயற்படுத்தப்படுகின்றன.

2025  செப்டெம்பர் மாத காலப்பகுதியில்  அனுமதிப்பெற்ற நுண்கடன் நிதி நிறுவனங்கள்  22.69 முதல்  39.40  சதவீத அடிப்படையில் வருடாந்த வட்டி வீதத்துக்கமைய கடன் வழங்குகின்றன.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நுண் கடன் நிதி நிறுவனங்களின் மனிதாபிமானமற்ற செயற்பாடுகள் காரணமாக  பலர்  தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்கள் என்று அறிக்கையிடப்படவில்லை.

2023 ஆம் ஆண்டி ன் 16 ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கி சட்டத்தின் 61 ஆவது பிரிவுடன் சேர்த்து வாசிக்க  வேண்டிய 2011  ஆம் ஆண்டு 42 ஆம் இலக்க  நிதி வர்த்தக சட்டம்,  2000 ஆம் ஆண்டு 56 ஆம் இலக்க நிதி  குத்தகைச் சட்டம்  மற்றும் 2016 ஆம் ஆண்டின் 06 ஆம் இலக்க  நுண்கடன் சட்டம்  ஆகிய சட்டங்களின் ஏற்பாடுகளுக்கமைய  நிதி நிறுவனம்,  குறிப்பாக குத்தகை  நிறுவனங்கள், மற்றும் நுண்கடன்  நிறுவனங்களை  கண்காணிக்கும் பொறுப்பு  வங்கிகளுக்கு வழங்கப்படவில்லை.நிதி நிறுவன கண்காணிப்பு திணைக்களத்துக்கு அந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

நுண்கடன் கண்காணித்தல் அதிகார சபை தொடர்பான சட்டவரைவு தயாரிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நாட்களில் அந்த வரைவு பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும்.அதற்கமைய மத்திய வங்கியால் பதிவு செய்யப்பட்ட நிதி நிறுவனங்களை  முறையாக  கண்காணிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.