பெலவத்தையிலிருந்து அரசாங்கம் நிர்வகிக்கப்படவில்லை

46 0

பெலவத்தையிலிருந்து தனிநபர் ஒருவரால் அரசாங்கம் நிர்வகிக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் வெளிப்படுத்த முற்படுகின்றன. பெலவத்தை அலுவலகத்தில் தேசிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) முக்கிய கூட்டங்கள் மாத்திரமே இடம்பெறுகின்றன. எதிர்க்கட்சிகள் அதனை மிகைப்படுத்திக் கூறுவதாக ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார்.

தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த நேர்காணலில் இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது :

பெலவத்தையிலிருந்து தனிநபர் ஒருவரால் அரசாங்கம் நிர்வகிக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் வெளிப்படுத்த முற்படுகின்றன. ஆனால் அது உண்மையல்ல. யாராலும் அதனை செய்ய முடியாது. இப்போது ஒரு அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் தீர்மானங்கள் ஜனாதிபதி மற்றும் அமைச்சரவையால் எடுக்கப்படுகின்றன. அந்த தீர்மானங்கள் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளால் செயற்படுத்தப்படுகின்றன.

அரசாங்கம் என்பது தேசிய மக்கள் சக்தியாகும். அந்த அரசாங்கத்துக்கு முன்மொழிவுகளை சமர்ப்பிக்கவும், அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு பங்களிக்கவும், உத்திகளைத் தயாரிக்கவும், நடவடிக்கைகளை எடுக்கவும் எமக்கு இடமும் தேவையும் இருக்கிறது. தேசிய மக்கள் சக்தியின் வழிநடத்தல் குழு பெலவத்தையிலேயே தொடர்ந்தும் கூடுகிறது. மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழுவும் பெலவத்தையிலேயே கூடுகிறது.

இவ்வாறு இரு கூட்டங்களின் போதும் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் அங்கு ஒன்று கூடுகின்றனர். அரசாங்கத்தில் எந்த பதவிகளையும் வகிக்காத பலர் தேசிய மக்கள் சக்தியின் தலைமைத்துவத்தில் இருக்கின்றன.

நானும் அங்கிருக்கின்றேன். நாம் குறைபாடுகளைப் பற்றியும் கலந்துரையாடுகின்றோம். எதிர்காலத்தில் செய்ய வேண்டிய விடயங்கள் பற்றியும் பேசுகின்றோம். பல யோசனைகள் முன்வைக்கப்படுவதோடு, அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான இணக்கப்பாடுகளும் எட்டப்படுகின்றன.

அரசாங்கத்தை செயற்படுத்துவதில் பெலவத்தையும் தொடர்புபட்டுள்ளது. பெலவத்தை என்ற கட்டடம் தொடர்புபடவில்லை. இரு கட்சிகளும் அங்கு கூடுவதால் அந்த இடம் அரசாங்கத்துடன் தொடர்புபட்டுள்ளது. எனினும் பெலவத்தையில் தனிநபர் ஒருவர் கைகளில் கைத்தொலைபேசியை வைத்துக் கொண்டு அரசாங்கத்தை வழிநடத்துவதாகக் கூறுவது மிகைப்படுத்தலாகும்.

அரசாங்கம் அங்கிருந்து நிர்வகிப்படுவதாக குற்றச்சாட்டுக்களை முன்வைப்பவர்களே அரசியல் பழிவாங்கலும் இடம்பெறுவதாகக் கூறுகின்றனர். அவர்கள் கூறுவதைப் போன்று பெலவத்தையில் எந்த வகையிலும் அரசியல் பழிவாங்கல் திட்டமிடப்படவில்லை.