குருக்கள்மடத்தில் உள்ள பாடசாலை கட்டடத்தில் இயங்கி வருகின்ற இராணுவ முகாமினை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட குருக்கள்மடம் ஏசியன் விளையாட்டுக் கழகத்தின் மாபெரும் மின்னொளி கரப்பந்தாட்ட சமரின் இறுதிப்போட்டி ஞாயிற்றுக்கிழமை (5) இரவு குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் கழகத் தலைவர் நா.பிரியதர்சன் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது அட்டாளைச்சேனை கோல்ட் ஸ்டார் விளையாட்டுக் கழகம் முதலிடத்தையும், குருக்கள்மடம் ஏசியன் விளையாட்டுக் கழகம் இரண்டாம் இடத்தையும் பெற்றுக்கொண்டது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கலந்துகொண்டார்.
இதன்போது வெற்றியீட்டிய அணிகளுக்கு கேடயங்களும் பணப்பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் சாணக்கியன் மேலும் தெரிவிக்கையில்,
குருக்கள்மடம் இராணுவ முகாமை அகற்றுவது தொடர்பில் நாம் ஜனாதிபதியுடன் மூன்று தடவை இது தொடர்பில் பேசியிருக்கின்றோம். இங்கு அமைந்திருக்கின்ற இராணுவத்தினருடன் எனக்கு எதுவித கோபங்களும் இல்லை.
குருக்கள்மடம் கிராமத்திலே இருக்கின்ற மைதானத்தை விஸ்தரிக்க வேண்டும். அதன் அறிக்கையை அமைந்திருக்கின்ற பாடசாலை கட்டடத்தில் கட்டடத்திலேயே இருக்கின்ற இராணுவ முகாமை அகற்றி, இருக்கின்ற பாடசாலை கட்டடத்தை மீட்டெடுக்க வேண்டும். அருகில் இருக்கின்ற சிறுவர் பூங்காவை புனலகத்தில் செய்ய வேண்டும் போன்ற காரணத்தால் அதிலே அமைந்திருக்கின்ற இராணுவத்தினரை அகற்றுமாறு கூறுகின்றோம். தவிர, மாறாக அங்கிருக்கின்ற இராணுவத்தினரிடம் எங்களுக்கு எதுவித கோபங்களும் இல்லை.
இந்த விடயம் குறித்து ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சு தொடர்பாக நடைபெற்ற கூட்டத்திலேயே உரையாடி இருக்கிறார். அதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்ற குருக்கள்மடம் இராணுவ முகாம், பாலையடிவட்டை இராணுவ முகாம், முறக்கொட்டாஞ்சேனை இராணுவ முகாம், காயங்கேணி இராணுவ முகாம் ஆகிய நான்கு இடங்களில் இருக்கின்ற இராணுவ முகாம்களை அகற்றுவது தொடர்பில் ஒரு மாதகாலம் இடைவெளி தருமாறு ஜனாதிபதியும் கேட்டிருக்கிறார். இந்நிலையில் முறக்கொட்டாஞ்சேனை இராணுவ முகாம் அகற்றப்பட்டுள்ளது.
எனினும், தாங்கள்தான் இராணுவ முகாம்களை அகற்றுவதற்காக குரல் கொடுத்ததாக பலர் வந்து தற்போது கருத்துத் தெரிவித்துக்கொண்டிருப்பது வேடிக்கையாக உள்ளது. அது எனக்கு பிரச்சினை இல்லை. இது எவ்வாறு இருந்தாலும் இராணுவ முகாம் அகற்றப்பட்டால் போதுமானது என அவர் இதன்போது தெரிவித்தார்.



