கொழும்பு – தெமட்டகொடை பிரதேசத்தில் உள்ள பாழடைந்த வீடொன்றிலிருந்து துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் மகசீன் உள்ளிட்ட ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தெற்கு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர்.
கொழும்பு தெற்கு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இந்த ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ரி- 56 ரக துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் மகசீன் ஆகியவையே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொறள்ளை – வனாத்தமுல்ல பிரதேசத்தில் உள்ள பாதாள உலக கும்பலைச் சேர்ந்த ஒருவரை கொலை செய்யும் திட்டத்திற்காக இந்த ஆயுதங்கள் இவ்வாறு பாழடைந்த வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்துள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு தெற்கு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

