உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றவேளை சங்கிரிலா ஹோட்டலின் 616- 623 இலக்க அறைகளில் தங்கியிருந்தவர்கள் யார் – ஐக்கிய மக்கள் சக்தி கேள்வி?

13 0

சஹ்ரான் ஹாசிம் சங்கிரிலா ஹோட்டலில் தங்கியிருந்தவேளை 616 மற்றும் 623 வது அறைகளில் தங்கியிருந்தவர்கள் யார் என ஐக்கிய மக்கள் சக்தி கேள்வி எழுப்பியுள்ளது.

2019 ஏப்பிரல் 21ம் திகதி தற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட சஹ்ரான் ஹாசிமும் அவரது சகா இலாம் அஹமட்டும் 20 ம் திகதி அதே ஹோட்டலில் சந்தித்த நபர்கள் குறித்த விபரங்களை மூடிமறைப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பேச்சாளர் முஜிபூர் ரஹ்மான் இது குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.

2019 ஏப்பிரல் 20 திகதி இரவு இரண்டு தற்கொலை குண்டுதாரிகள்  சங்கிரிலா ஹோட்டலின் ஆறாவது மாடியில் உள்ள அறையில் தங்கியிருந்தனர் என அவர் தெரிவித்துள்ளார்.

அந்த அறையில் தங்கியிருந்த இருவரின் பெயர் விபரங்களை ஹோட்டல் நிர்வாகம் பகிரங்கப்படுத்த  மறுக்கின்றது எனவும்  அவர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு முதல் இரண்டு வாரங்களில் ஹோட்டலில் தங்கியிருந்தவர்களின் விபரங்கள் கொழும்பு உயர்நீதிமன்றத்திடம் வழங்கப்பட்டுள்ள போதிலும் 616ம் இலக்க அறையில் தங்கியிருந்தவர்களின் பெயர் விபரங்களை ஹோட்டல் நிர்வாகம் வழங்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

அந்த ஹோட்டலின் ஆறாம்மாடியின் மற்றுமொரு அறையில் தங்கியிருந்தவர்களின் விபரங்களையும் ஹோட்டல் நிர்வாகம் நீதிமன்றத்திற்கு தெரிவிக்கவில்லை என குறிப்பிட்டுள்ள முஜிபூர் ரஹ்மான் 623ம் இலக்க அறையில் தங்கியிருந்தவர்களும் சஹ்ரான் ஹாசிம் குழுவினருடன் தொடர்புபட்டவர்கள் போல தோன்றுகின்றது என குறிப்பிட்டுள்ளார்.