மன்னாரில் முடக்கப்பட்ட தாராபுரம் விடுவிக்கப்பட்டது!

338 0

மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தாராபுரம் கிராமம் கடந்த 8ஆம் திகதி அதிகாலை முதல் முழுமையாக முடக்கப்பட்ட நிலையில் நேற்று(திங்கட்கிழமை) மாலை 3 மணியளவில் விடுவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 18ஆம் திகதி மன்னார் தாராபுரம் கிராமத்தில் இடம் பெற்ற மரணச் சடங்கு ஒன்றில் கலந்து கொண்டு விட்டு புத்தளத்திற்குச் சென்ற ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

குறித்த நபர் கடந்த 15ஆம் திகதி இந்தோனேசியாவில் இருந்து இலங்கைக்கு வந்திருந்தார். அதற்கு பின்னர் 18ஆம் திகதி மன்னார் தாராபுரம் கிராமத்திற்கு வந்து மரணச்சடங்கில் கலந்து கொண்டு பின்னர் மீண்டும் புத்தளத்திற்குச் சென்றுள்ளார்.

இந்த நிலையில் குறித்த நபர் புத்தளத்தில் இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். பின்னர் சமூக ரீதியில் அவருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது அவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் அவர்கள் உடனடியாக மன்னாரில் உள்ள உறவினர்களுக்கு அறிவித்துள்ளதோடு, பொலிஸாருக்கும் அறிவித்திருந்தனர்.

உடனடியாக மன்னார் பொலிஸார் மற்றும் சுகாதார துறையினர் குறித்த கிராமத்திற்குச் சென்று தாராபுரம் கிராமத்தில் உள்ள இரண்டு கிராம அலுவலகர் பிரிவுகளையும் எதிர் வரும் ஒரு வாரத்திற்கு முடக்க நடவடிக்கைகள் மேற்கொண்டனர்.

மேலும் குறித்த கிராமத்தில் இரண்டு குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்களிடம் வைத்திய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவில் அவர்களுக்கு எவ்வித தொற்றும் இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் குறித்த தாராபுரம் கிராமத்தை விடுவிப்பது தொடர்பாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.

இதனைத் தொடர்ந்து குறித்த கிராமம் நேற்று மாலை 3 மணியளவில் முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளது.