வடமராட்சியில் மீண்டும் பதற்றம்

2985 0
வடமராட்சி வல்லிபுரக்கோவில் அருகே மணல் திருட்டில் ஈடுபட்ட வாகனத்தினை மறித்து சோதனையிட்ட கரையோரக் காவல்படையினர்மீது கொள்ளையர் கல்லெறித்தாக்குதல் மேற்கொண்டதனையடுத்து கரையோரப் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
வடமராட்சி நாகர்கோவில் குடத்தனை வீதியில் நேற்று மாலை 5 மணியளவில் துவிச்சக்கர வண்டிகளில் சென்ற 4 கரையோரக் காவல்படையினரே இவ்வாறு சோதனையில் ஈடுபடமுனைந்துள்ளனர். இவ்வாறு கரையோரக் காவல்படையினர் சோதனையில் ஈடுபட்ட சமயம் மணல் கொள்ளையர் கல்லெறித் தாக்குலை மேற்கொண்டுள்ளனர்.
இதனையடுத்து கரையோரக் காவல்படையினரோ பதிலுக்குத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இவ்வாறு இடம்பெற்ற சம்பவத்தில் இரு கரையோரக் காவல்படையினர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே நேரம் மேற்படி சம்பவம் தொடர்பில் நேற்று இரவு கரையோரக் காவல்படையினர் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.
இதேவேளை குறித்த சம்பவத்தில் மணல்கொள்ளையரை மறிக்க முயன்ற கரையோரக் காவல்படையினரைத் தாக்கி அவர்களின் ஓர் ஆயுத்த்தினை பறித்தெடுத்த மணல்கொள்ளையர் தப்பியோடியுள்ளதாக கூறப்படுகின்றபோதும்  மேற்படி சம்பவத்தினை சுயாதீனமாக உறுதி செய்ய முடியவில்லை. இவற்றின் காரணமாக பிரதேசத்தில் பதற்றம் நிலவுகின்றது.

Leave a comment