தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் மண்எண்ணெய் குண்டு வீசிய வழக்கில் 6 பேர் கைது

2618 0

சென்னை தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் மண்எண்ணெய் குண்டு வீசிய வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் கடந்த 13-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு அடுத்தடுத்து 3 குண்டுகள் வீசப்பட்டது. அந்த குண்டுகள் போலீஸ் நிலையத்தின் வாசலில் விழுந்து தீப்பிடித்து எரிந்தது.அப்போது போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் பூமிநாதன் விழிப்புடன் செயல்பட்டு தீயை உடனடியாக அணைத்தனர். இதனால் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. சம்பவம் பற்றி தகவலறிந்து சென்னை நகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், கூடுதல் கமிஷனர் சாரங்கன், இணை கமிஷனர் அன்பு ஆகியோர் உடனடியாக தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு வந்தனர்.

நக்சலைட் பாணியில் போலீஸ் நிலையம் மீது குண்டு வீசப்பட்டது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழக சட்டசபையிலும் குண்டு வீசப்பட்ட விவகாரம் விவாதிக்கப்பட்டது.போலீஸ் நிலையத்தில் மிகச் துணிச்சலாக குண்டு வீசிய குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் இறங்கினர்.

போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் ஆலோசனையின் பேரில், கூடுதல் கமிஷனர் சாரங்கன், இணை கமிஷனர் அன்பு ஆகியோர் நேரடி மேற்பார்வையில் சென்னை தியாகராயநகர் துணை கமிஷனர் அரவிந்தன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் கிரி, சந்துரு, ஆல்வின் ராஜ் உள்ளிட்டோர் அடங்கிய 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.தனிப்படை போலீசார் பல்வேறு பிரிவுகளாக சென்று விசாரணை நடத்தினர். சந்தேகத்தின் பேரில் பழைய குற்றவாளிகள் 83 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் போலீசார் ஆராய்ந்தனர். இதில் 3 மோட்டார் சைக்கிளில் 6 பேர் வருவது போன்று காட்சி பதிவாகி இருந்தது. அவர்கள் குண்டு வீசும் காட்சியும் இடம் பெற்றிருந்தது. அதிகாலை நேரம் என்பதால் அந்த காட்சிகள் தெளிவாக கேமராவில் பதிவாகவில்லை.

பின்னர் அந்த கேமரா காட்சி பதிவுகள் நுட்பமான முறையில் ஆராயப்பட்டது. அப்போது குற்றவாளிகளின் சிலரது முகமும், அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளும் அடையாளம் காணப்பட்டது.கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து நடத்தப்பட்ட விசாரணையில் போலீஸ் நிலையத்தின் மீது குண்டு வீசியது சென்னை தேனாம்பேட்டை எஸ்.எம்.நகரை சேர்ந்த வினோத் என்கிற கருக்கா வினோத் (வயது 35), கண்ணகி நகரை சேர்ந்த மணி என்கிற டியோமணி (23) ஆகிய ரவுடிகள் என்பது தெரிய வந்தது.

இதற்கு அவர்களுடைய கூட்டாளிகள் கண்ணகிநகரை சேர்ந்த மணிகண்டன்(20), ஒக்கியம் துரைப்பாக்கம் எழில்நகரை சேர்ந்த ஐயப்பன் என்கிற அஸ்வின்(21), அருண்(18), ராயபுரம் கல்மண்டபம் மார்க்கெட் தெருவை சேர்ந்த கார்த்திக்(35) உடந்தையாக இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து தலைமறைவாக இருந்த 6 பேரையும் தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணைக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 6 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.குற்றவாளிகள் கைது செய்யப்பட்டது குறித்து தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் தென்சென்னை போலீஸ் இணை கமிஷனர் அன்பு நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

மணி என்கிற டியோ மணி மீது பாண்டி பஜார் போலீஸ் நிலையத்தில் கொலை, கொள்ளை போன்ற பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. அவர் சரித்திர பதிவேடு குற்றவாளி ஆவார்.
ஒரு குற்ற வழக்கு தொடர்பாக தலைமறைவாக இருந்த டியோ மணியை போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில் தேனாம்பேட்டை போலீஸ்நிலையத்தில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சியில் பதிவான காட்சிகளை வைத்து நடத்தப்பட்ட விசாரணையில், போலீஸ் நிலையத்தில் குண்டு வீசியது டியோ மணி என்பது தெரிய வந்தது.

அதனடிப்படையில் தலைமறைவாக இருந்த அவர் கைது செய்யப்பட்டார். மண்எண்ணெய் குண்டுவை தயாரித்து கொடுத்த அவருடைய கூட்டாளி கருக்கா வினோத்தும் சிக்கினார். கடந்த 2015-ம் ஆண்டு தியாகராயநகரில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் கருக்கா வினோத் கைது செய்யப்பட்டவர். கைது செய்யப்பட்ட மற்ற 4 பேரும் உடந்தையாக இருந்தனர்.கைது செய்யப்பட்ட 6 பேர் மீது கொலை முயற்சி, பொதுச்சொத்து சேதம் விளைவித்தல், வெடிமருந்து தடுப்பு சட்டம் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் செய்தது மிகப்பெரிய குற்றம் ஆகும். எனவே அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பரிசீலிக்கப்படுகிறது.போலீஸ்நிலையங்கள் அனைத்திலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.